நேபாளில் கடுமையான நிலநடுக்கம்.. வீதிக்கு ஓடி வந்த பொதுமக்கள்.. ரிக்டரில் 6.0 பதிவு!
காத்மண்டு: நேபாளில் காலை 8 மணியளவில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
2015ம் ஆண்டு ஏப்ரல் 25ம் தேதியன்று நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவிற்கும் பொக்காரா நகருக்கும் இடையே ரிக்டர் அளவுகோலில் 7.8 அளவுகொண்ட அதிதீவிர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 8,964 பேர் உயிரிழந்தனர். சுமார் 22,000 பேர் காயமடைந்தனர். கோர்க்கா பூகம்பம் என்று அழைக்கப்படும் இந்த நிலநடுக்கம் வட இந்தியாவின் பல நகரங்களையும் உலுக்கியது. அதேபோல் பாகிஸ்தான், திபெத் மற்றும் வங்காளதேசம் ஆகிய இடங்களிலும் உணரப்பட்டது.
இதனைத்தொடர்ந்து அண்மைக் காலமாக நேபாளத்தில் அதிகளவில் நிலநடுக்கம் ஏற்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவாகியது. இது காத்மாண்டு பள்ளத்தாக்கு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
இந்த நிலையில் இன்று காலை 8.13 மணியளவில் நேபாள நாட்டின் தலைநகர் காத்மண்டுவில் இருந்து கிழக்கு பகுதியில் தென்கிழக்கே 147 கி.மீ தொலைவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 6.0 ஆக பதிவாகி உள்ளது.
இதனால் நேபாளம், இந்தியா மற்றும் சீனாவில் நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டு உள்ளன. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் உறுதி செய்துள்ளது. இதனால், சில பகுதிகளில் வீடுகளில் இருந்த மக்கள் அச்சமடைந்து, பாதுகாப்பு தேடி தெருக்களுக்கு ஓடி வந்தனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
பிலிப்பைன்சில் பயங்கர நிலநடுக்கம்.. ரிக்டரில் 7.1-ஆக பதிவு.. சுனாமி எச்சரிக்கை இல்லை!
நேபாள நாட்டு நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இழப்புகள் குறித்து இதுவரை எந்த தகவலும் அந்நாட்டு அரசால் வெளியிடப்படவில்லை. அதே போல் நிலநடுக்கம் காரணமாக அந்நாட்டின் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. இதனால் விமானங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் வெளிநாடு செல்ல முற்பட்ட ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிப்பை சந்தித்துள்ளனர்.
மேலும் நேபாளத்தில் சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கங்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் உயிர்கள் மற்றும் சொத்துகளுக்கு சேதங்களை விளைவித்து வருகின்றன. இதனால் பேரழிகளை கட்டுப்படுத்தவும், நிர்வகிக்கவும் தேவையான நடவடிக்கையை எடுக்கப்பட வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.