இத்தாலியில் கப்பல் மூழ்கி 14 பேர் பலி: 200 பேர் மாயம்!
ரோம்: இத்தாலியில் சிறு கப்பல் ஒன்று மூழ்கியதில் 14 பேர் பலியாகி உள்ளதாகவும், 200 பேர் மாயமாகி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இத்தாலியில் அகதிகளாக இருந்த சுமார் 400க்கும் மேற்பட்ட வட ஆப்பிரிக்கர்களை ஏற்றிக் கொண்டு சிறிய ரக கப்பல் ஒன்று லம்பெடுசா தீவுக்கு சென்றது. இந்நிலையில், லம்பெடுசா தீவுக்கு சுமார் 185 கிலோ மீட்டர் தொலைவில் கப்பல் சென்று கொண்டிருந்தபோது அது கடலில் மூழ்கியது.
இந்த விபத்தில் 14 பேர் பலியாகியுள்ளதாகவும், 215 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 200க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து, லம்பெடுசா துறைமுக கேப்டன் கூறுகையில், ''கப்பலில் எத்தனை பேர் வந்தனர் என்று எங்களுக்கு தெரியாது. ஆனால், உயிர் பிழைத்தவர்கள் நூற்றுக்கணக்கானோர் வந்தோம் என்று தெரிவித்துள்ளனர். தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது'' என்றார்.
கடந்த வார இறுதியில் லிபியக் கடலோரமாக ஒர் படகு கவிழ்ந்து 36 பேர் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் நடைபெற்று பரபரப்பு அடங்கும் முன்னரே மீண்டும் அகதிகளாக வந்தவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது மீட்புப் பணியில் இரு யுத்தக் கப்பல்களும் ஒரு ஹெலிகாப்டரும் லிபியக் கப்பற்படையால் ஈடுபடுத்தப் பட்டுள்ளன.
ஐரோப்பிய யூனியனுக்கு ஆப்பிரிக்கவில் இருந்து அகதிகளாக புலம் பெயர்பவர்கள் நுழையும் முக்கிய கேந்திரமாக லிபியா விளங்கி வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு லம்பெடுசாவுக்கு அருகே இரு படகு விபத்துக்களில் 400 இற்கும் அதிகமான புலம்பெயர்வோர் கொல்லப் பட்டுள்ளனர்.
மேலும் கடந்த 20 வருடங்களில் ஐரோப்பாவுக்கு அகதிகளாக வர முயற்சி செய்த 20000 பேர் கடலில் பலியானதாக புள்ளி விபரம் கூறுகின்றது.
இந்த நிலையில் கடந்த 5 நாட்களுக்குள் 2000 அகதிகளை மீட்டிருப்பதாக இத்தாலி இராணுவம் அறிவித்துள்ளது. லிபியாவில் இருந்து மத்திய தரைக் கடலின் ஊடாக ஐரோப்பாவுக்குள் நுழையும் தஞ்சம் தேடுபவர்கள் பெரும்பாலும் எரிட்ரியா, சோமாலியா, சிரியா மற்றும் லிபியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.