பாகிஸ்தான்- ஆப்கான் நிலநடுக்கம்: 330 பேர் பலி - விடிய விடிய வீதிகளில் தங்கினர்
இஸ்லாமாபாத்: நிலநடுக்கம் காரணமாக பாகிஸ்தான், ஆப்கனில் பலியானவர்களின் எண்ணிக்கை 330 ஆக அதிகரித்துள்ளது. ஆயிரத்துக்கும் மேலானோர் காயமடைந்துள்ளனர். மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.பல இடங்களில் தொலைதொடர்பு வசதி துண்டிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்ட அடுத்த 40வது நிமிடத்தில் நில அதிர்வு ஏற்படத் தொடங்கியது. முதல் நில அதிர்வு, ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவானது. தொடர்ந்து அடுத்தடுத்து நில அதிர்வுகள் ஏற்படும் என்று அஞ்சிய மக்கள் பாகிஸ்தானில் பெரும்பாலான பகுதிகளில் பீதி அடைந்த மக்கள் விடிய விடிய வீதிகளில் தங்கினர்.
ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலைப் பகுதியில் 102 கி.மீ ஆழத்தில் இன்று பிற்பகல் 2.45 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 7.7 ஆக பதிவாகி இருந்தது.இதனால் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. பொதுமக்கள் கட்டிடங்களில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். காபூல் உள்ளிட்ட ஆப்கான் நகரங்களில் மின்சாரமும் தொலைபேசி சேவையும் முற்றாக துண்டிக்கப்பட்டன.
மலைப்பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. நிலநடுக்கத்தால் ஆப்கானிஸ்தான் குனார் பகுதியில் 63 பேர் உயிரிழந்தனர். 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
200 பேர் பலி
இதேபோல் பாகிஸ்தானின் லாகூர், இஸ்லாமாபாத், ராவல்பிண்டி பெசாவர் உள்ளிட்ட பல நகரங்களிலும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், அங்கு கட்டடங்கள் இடிந்து விழுந்தன. பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், 200 பேர் உயிரிழந்தனர். 1,300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
கடுமையான பாதிப்பு
நிலநடுக்கத்தால், மலகண்ட் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவ தளபதி ரஷீல் ஷெரிப் ஆய்வு மேற்கொண்டார். மலைப்பிரதேசங்களில் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அதிகாரிகள் அச்சம் தெரிவித்தனர்.
ஆயிரக்கணக்கானோர் படுகாயம்
நிலநடுக்கத்தால். பெஷாவர் அரசு மருத்துவமனைகளில் மட்டும் 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். மீட்புக்குழுவினர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விரைந்துள்ளனர். எந்த உத்தரவுக்கும் காத்திருக்காமல் மீட்பு பணிகளை மேற்கொள்ள ராணுவம் உள்ளிட்ட அனைத்து துறையினருக்கும் பிரதமர் நவாஸ் ஷெரீப் உத்தரவிட்டுள்ளார்.
அடுத்தடுத்து அதிர்ச்சி
இதற்கிடையே நிலநடுக்கம் ஏற்பட்ட அடுத்த 40வது நிமிடத்தில் நில அதிர்வு ஏற்படத் தொடங்கியது. முதல் நில அதிர்வு, ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவானது. தொடர்ந்து அடுத்தடுத்து நில அதிர்வுகள் ஏற்படும் என்று அஞ்சிய மக்கள் பாகிஸ்தானில் பெரும்பாலான பகுதிகளில் பீதி அடைந்த மக்கள் விடிய விடிய வீதிகளில் தங்கினர்.