இலங்கை பயணத்தில் எச்சரிக்கை...: மக்களுக்கு ஆஸி. அறிவுரை
சிட்னி: இலங்கைக்கு பயணம் மேற்கொள்வது ஆபத்தானது, எனவே எச்சரிக்கையுடன் செயல்படுங்கள் என தனது நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது ஆஸ்திரேலியா.
இலங்கையின் அளுத்கமா, பேருவளை ஆகிய இடங்களில் சிங்களர்கள் தமிழ் பேசும் முஸ்லிம்கள் மீது கடுமையாக தாக்குதல் நடத்தினர். இதில் 3 பேர் பலியாகி உள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தால் இலங்கையின் பல இடங்களில் பதற்றம் நீடித்து வருகிறது. மேலும், கலவரம் உண்டாவதைத் தடுக்கும் வகையில் தாக்குதல் நிகழ்ந்த இடங்களில் ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனால், இலங்கைக்கு சென்றுள்ள மற்றும் செல்லவுள்ள தங்கள் நாட்டு மக்களுக்கு அறிவுரை தெரிவித்துள்ளது ஆஸ்திரேலியா. இது தொடர்பாக ஆஸ்திரேலியா வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது :-
இலங்கையில் சில பகுதிகளில் பதற்ற நிலைமை நீடித்து வருவதால் பயணங்களின் போது எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியது அவசியமானது. பேருவளை மற்றும் அளுத்கம பிரதேசத்தில் ஊரடங்கு உத்தரவு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, அதனை மதித்துச் செயல்படுங்கள்.
ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடைபெறும் இடங்களுக்கான பயணங்களை தவிர்த்து விடுங்கள். அவ்வாறான போராட்டங்களில் பங்கேற்பதனையும் தவிர்த்து விடுங்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.