அமெரிக்கா: பரபரப்பான சாலையின் நடுவே நிஜத்தில் அரங்கேறிய ‘பேபி’ஸ் டே அவுட்’....
பிரிஹாம் சிட்டி: தமிழில் ‘சுட்டிக் குழந்தை' என்ற பெயரில் வெளியான ‘பேபி'ஸ் டே அவுட்' படத்தைப் பார்த்திருப்போம். ஆனால் அதுவே நிஜத்தில் நடந்தால் கொஞ்சம் பதறித்தான் போவோம் இல்லையா.
அப்படித்தான் அமெரிக்காவின் உடா பகுதியில் எப்போதும் பரபரப்பாக வாகன நெரிசலாக உள்ள பிர்ஹாம் சிட்டி நால்வழிச்சாலையில் சிறு குழந்தை ஒன்று தவழ்ந்து வந்து பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை, அச்சாலையில் பயணம் செய்து கொண்டிருந்த கார் டிரிஅவர் ஒருவர், ஒரு வயது குழந்தை ஒன்று சாலையில் தவழ்ந்து வருவதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உடனடியாக குழந்தையை மீட்ட டிரைவர், இது தொடர்பாக போலீசுக்கு தகவல் அளித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசாரிடம் குழந்தையை ஒப்படைத்தார் டிரைவர். அதனைத் தொடர்ந்து மேற்கொண்டு போலீசார் நடத்திய விசாரணையில் குழந்தையின் தாய் தனது குழந்தையை தொட்டிலில் தூங்குவதற்காக படுக்க வைத்திருந்ததும், ஆனால் அவரது ஏழு வயது மகள் குழந்தையை தோட்டத்தில் விளையாட தூக்கிச் சென்றதும் தெரிய வந்தது. தனது அக்காவுடன் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தவறுதலாக சாலைக்கு தவழ்ந்து வந்து விட்டது.
இதையடுத்து, விசாரணையின் முடிவில் அந்த குழந்தை பத்திரமாக தாயிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது. எனினும், குழந்தையை கவனிக்காமல் அஜாக்கிரதையாக இருந்த காரணத்திற்காக அவர் மீது குழந்தை மற்றும் குடும்ப நல சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.