அமெரிக்காவில் முஸ்லிம்கள் நுழைய தடை விதிக்க அதிபர் பதவி வேட்பாளர் டோனால்ட் கோரிக்கை!
வாஷிங்டன்: அமெரிக்காவிற்குள் முஸ்லிம்கள் வருவதற்கு தடை விதியுங்கள் என்று அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ள டோனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தி புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.
கடந்த மாதம் பாரீஸ் நகரில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் பொதுமக்கள் 130 பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் அகதிகள் போர்வையில் ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்குள் புகுந்தனர் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியது.
இந்நிலையில் அமெரிக்காவின் சான்பெர்னார்டினோ நகரில் கடந்த 2 ஆம் தேதி துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 14 அப்பாவி மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 21 பேர் படுகாயம் அடைந்தனர். தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச்சென்ற சயீத் ரிஸ்வான் பாரூக் , அவருடைய மனைவி தஸ்பீன் மாலிக் இருவரையும் போலீசார் பின்னர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர். அமெரிக்காவில் துப்பாக்கி சூடு நடத்தி 14 பேரை கொன்ற கணவன்-மனைவிக்கு பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இவ்விவகாரம் தொடர்பாக அமெரிக்காவின் புலனாய்வு துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையே பெண் தீவிரவாதி தஸ்பீன் மாலிக் தொடர்பான தகவல்களை பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அழித்துவருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவில் 2016 இல் நடக்க இருக்கும் அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் பதவிக்கு போட்டியிட உள்ள டோனால்ட் ட்ரம்ப், முஸ்லிம்கள் அமெரிக்காவிற்குள் வருவதற்கு தடைவிதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திஉள்ளார். அமெரிக்காவிற்குள் முஸ்லிம்கள் வருவதற்கு எல்லையில் முழுவதுமாக தடை விதிக்கப்பட வேண்டும் என தனது பிரச்சார அறிக்கையில் அழைப்பு விடுத்து உள்ளார். நமது நாட்டு பிரநிதிகள் என்ன நடக்கிறது என்பதை கண்டுபிடிக்கும் வரையில், தடையானது நீடிக்கப்பட வேண்டும் என்று கூறிஉள்ளார்.
இதற்கிடையே டோனால்ட் கருத்தானது அமெரிக்காவின் மதிப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு நலனுக்கு எதிரானது என்று வெள்ளை மாளிகை தெரிவித்து உள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ள, நியூயார்க் தொழில்அதிபர் ஜெப் புஷ் இது மனோவியாதி என்று விமர்சனம் செய்து உள்ளார்.