போர்க்குற்ற வழக்கு: வங்கதேச முன்னாள் அமைச்சர் நிஜாமி நள்ளிரவில் தூக்கிலிடப்பட்டார்!!
டாக்கா: 1971-ம் ஆண்டு போர்க்குற்ற வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட வங்கதேசத்தின் முக்கிய எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் அமைச்சருமான ரகுமான் நிஜாமி நள்ளிரவில் தூக்கிலிடப்பட்டார். இதைக் கண்டித்து அவருடைய ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
1970-ம் ஆண்டுக்கு முன்பு வரை பாகிஸ்தானின் கட்டுப்பாட்டின் கீழ் கிழக்கு பாகிஸ்தானாக இன்றைய வங்கதேசம் இருந்தது. ஆனால் பாகிஸ்தானுக்கு எதிராக 1971-ம் ஆண்டு வங்கதேசத்தில் விடுதலைப் போர் வெடித்தது.
வங்கதேசத்தின் இந்த விடுதலைப் போருக்கு அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி முழு ஆதரவளித்தார். இது இந்தியா- பாகிஸ்தான் போராகவும் வெடித்தது. போரின் முடிவில் வங்கதேசம் தனி சுதந்திர நாடாக பிரகடனப்படுத்தப்பட்டது.
இப்போரின் போது வங்கதேசத்தின் விடுதலைக்கு எதிராகவும் பாகிஸ்தான் ராணுவத்துக்கும் ஆதரவாகவும் மொதியுர் ரகுமான் நிஜாமி தலைமையிலான அல்பதர் பாகினி என்ற ஆயுதக் குழுவினர் கொலை, கொள்ளை, பலாத்காரம் போன்ற கொடூரங்களில் ஈடுபட்டனர். நிஜாமியின் சொந்த ஊரிலேயே 450 அப்பாவி மக்கள் அவரது ஆயுதக் குழுவால் இனப்படுகொலை செய்யப்பட்டனர்.
வங்கதேச விடுதலைக்குப் பின்னர் இந்த போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலுத்து வந்தது. இதனிடையே நிஜாமி, ஜமாத்-இ- இஸ்லாமி என்ற அரசியல் கட்சியையும் தொடங் முன்னாள் பிரதமர் கலீதா ஜியா தலைமையிலான கூட்டணி அரசில் அமைச்சராகவும் பதவி வகித்தார்.
இந்நிலையில் 2009-ம் ஆண்டு வங்கதேச சர்வதேச போர்க்குற்ற நடுவர் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டு ரகுமான் நிஜாமி உள்பட 10-க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த விசாரணையின் முடிவில் 2014-ம் ஆண்டு நிஜாமிக்கு தூக்குதண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து நிஜாமி வங்கதேச உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ஆனால் அவரது மேல்முறையீட்டு மனுவை கடந்த 5-ந் தேதி வங்கதேச உச்சநீதிமன்றம் நிராகரித்தது.
இதனால் அந்நாட்டு அதிபரிடம் மன்னிப்பு கோரினால் மட்டுமே தூக்கு தண்டனையில் இருந்து தப்பும் வாய்ப்பு நிஜாமிக்கு இருந்தது. ஆனால் நிஜாமியோ மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். இதையடுத்து ரகுமான் நிஜாமிக்கு எந்த நேரத்திலும் தூக்குதண்டனை நிறைவேற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால் அவர் அடைக்கப்பட்டு இருந்த டாக்கா மத்திய சிறையைச் சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு சரியாக 12 மணி 1 நிமிட அளவில் நிஜாமிக்கு தூக்குதண்டனை நிறைவேற்றப்பட்டது. வங்கதேசத்தில் போர்க்குற்ற வழக்கில் தூக்குதண்டனை நிறைவேற்றப்பட்ட 5-வது முக்கிய எதிர்க்கட்சி தலைவர் நிஜாமி. ஏற்கனவே இவருடைய ஜமாத் இ-இஸ்லாமி கட்சியின் 3 தலைவர்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டு உள்ளது.
73 வயது ரகுமான் நிஜாமி தூக்கிலிடப்பட்டதைக் கண்டித்து வங்கதேசத்தில் இன்று முதல் 24 மணிநேரத்துக்கு முழு அடைப்புக்கு ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி அழைப்பு விடுத்து உள்ளது. இதனால் அந்நாடு முழுவதும் பதற்றமான நிலைமை இருந்து வருகிறது.
அதே நேரத்தில் நிஜாமி தூக்கிலிடப்பட்டதற்கு வவங்கதேச சுதந்திரப் போராட்ட வீரர்களும், அவர்களுடைய குடும்பத்தினரும் மகிழ்ச்சி தெரிவித்து இனிப்புகளை பரிமாறி கொண்டாடினர்.