வங்கதேச பொதுத்தேர்தல்.. பிரதமர் ஷேக் ஹசீனா மீண்டும் வெற்றி.. 5-வது முறை ஆட்சி அமைக்கிறார்
டாக்கா: வங்கதேசத்தில் இன்று பொதுத்தேர்தல் நடந்தது. வாக்கு எண்ணிக்கையில் பாதிக்கும் மேற்பட்ட இடங்களில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் 5-வது முறையாக ஷேக் ஹசீனா பிரதமர் பொறுப்பை ஏற்க இருக்கிறார்.
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்று வங்கதேசம். அங்கு பிரதமராக ஷேக் ஹசீனா பதவி வகித்து வருகிறார். அவரது பதவிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில் அங்கு பொதுத்தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானது. எனினும், தேர்தலுக்கு முன்பாக பொதுவான ஒரு அரசை நிறுவி தேர்தலை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

எதிர்க்கட்சிகளின் இந்த கோரிக்கையை ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு நிராகரித்தது. இதனால், வங்கதேசத்தில் உள்ள முக்கிய எதிர்க்கட்சிகள் நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. மேலும், தேர்தலை புறக்கணிப்பதாகவும் அறிவித்து இருந்தன. இத்தகைய பரபரப்புக்கு மத்தியில் இன்று அந்நாட்டில் பொதுத்தேர்தல் நடைபெற்றது.
முக்கிய எதிர்க்கட்சிகள் போட்டியிடாமல் புறக்கணித்ததால் ஷேக் ஹசீனா எளிதில் வெற்றி பெறுவார் என்று கணிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை 8 மணிக்கு தேர்தல் தொடங்கி மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. மொத்தம் 42,000 க்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகளில் மக்கள் இன்று ஓட்டு செலுத்தினர். இந்த தேர்தலில் பதிவான உடனடியாக எண்ணப்பட்டன.
இந்த தேர்தலில் 27 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 1,500-க்கும் மேற்பட்ட வேட்பாளர்களும், 436 சுயேச்சை வேட்பாளர்களும் போட்டியிட்டு இருந்தனர். இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கையில் பாதிக்கும் மேற்பட்ட இடங்களில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் 5-வது முறையாக ஷேக் ஹசீனா பிரதமர் பொறுப்பை ஏற்க இருக்கிறார்.
மொத்தம் உள்ள 300 தொகுதிகளில் 264 தொகுதிகளுக்கு வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி 204 இடங்களில் வென்றுள்ளது. கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹாசனும் தனது தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.












Click it and Unblock the Notifications