அமெரிக்க ஓரின சேர்க்கையாளர் கிளப்பில் துப்பாக்கி சூடு.. ஒபாமா, மோடி கண்டனம்
வாஷிங்டன்: அமெரிக்காவில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கான இரவு விடுதியில் 50 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த வாலிபர் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் ஆர்லண்டோ நகரில் 'பல்ஸ்' என்ற பெயரில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கான இரவு விடுதி செயல்பட்டு வந்தது. அந்த விடுதியில் நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய கேளிக்கை கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

நேற்று அதிகாலை 2 மணியளவில் திடீரென அங்கு துப்பாக்கியுடன் நுழைந்த வாலிபர், அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டார். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. அங்கு வந்திருந்தவர்கள் உயிர் பிழைப்பதற்காக அலறியவாறு அங்குமிங்கும் ஓடினர்.
இருப்பினும் ஏராளமானவர்கள் குண்டுபாய்ந்து ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். தகவல் அறிந்த போலீஸ் படையினர் விரைந்து வந்து, துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை சுட்டுக்கொன்றனர்.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 50 பேர் உயிரிழந்து விட்டதாகவும், 53க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளதாகவும், இந்த தாக்குதலில் போராளி குழுக்களின் கைவரிசை சந்தேகிக்கப்படுவதாகவும் ஆர்லண்டோ போலீஸ் வட்டாரங்கள் முதலில் தெரிவித்தன. ஆனால், ஆப்கன் வம்சாவளியை சேர்ந்த உமர் மதீன் என்ற அமெரிக்க குடிமகன்தான் இக்கொலையை செய்தது என்பது பிறகு தெரியவந்தது.
இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்திய பிரதமர் மோடி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications