பிரசவத்தின் போது தூங்கிய பிரேசில் பெண்… வலி உணர முடியாத வியாதியாம்!
ரியோ டி ஜெனிரோ: பெண்களுக்கு பிரசவம் மறுபிறவி என்பார்கள். பத்து மாதம் குழந்தையை கருவில் சுமக்கும் போது கூட சமாளித்துக்கொள்வார்கள். ஆனால் பிரசவம் நெருங்க நாளொரு வலி வந்து போகும்... சூட்டு வலி கசாயம் கொடுத்தே சமாளிக்க வைப்பார்கள் கிராமத்து பாட்டிகள்.
பிரசவ அறையில் வலியில் துடிக்கும் போதே உயிர் சொர்கத்தையோ நரகத்தையோ போய் தொட்டு விட்டு வரும். இனிமேல் குழந்தையே பெற்றுக்கொள்ளக்கூடாது என்ற வைராக்கியம் பெண்களுக்கு வரும். அதெல்லாம் பிரசவம் வரைக்கும்தான் அப்புறம் கர்பிணிப் பெண்களைப் பார்க்கும் போது லேசாய் ஆசை எட்டிப்பார்க்கும். நம்ம கதையை விடுங்க. ஒரு பெண்மணிக்கு பிரசவ வலியே தெரியாமல் லேபர் வார்டில் போய் தூங்கி எழுந்து வந்திருக்கிறார்.
பிரேசில் நாட்டைச் சேர்ந்த மரிசா டெ தொலெதோ என்ற பெண்மணிதான் அந்த அதிசய பிறவி. உலக அளவில் வலியை உணர முடியாத சுமார் 50 பேரில் இவரும் ஒருவர். அபூர்வமான மரபணு மாற்றம் காரணமாக இவரது உடலின் வலி மூளையால் உணரப்படுவதில்லையாம்.
இவர் பிறந்தபோதே அனெல்ஜீஷியா (analgesia) என்கிற மரபணு மாற்ற நோயுடன் பிறந்தவர் என்பதால் அவரால் உடலின் வலியை உணரவே முடியாதாம்.
வலி உணராத பெண்
27 வயதாகும் மரிசா ஒரு கால் விரலை பறிகொடுத்திருக்கிறார். உடல் முழுக்க காயத்தின் தழும்புகளோடு காணப்படுகிறார். ஆனால் அவர் ஒருநாளும் வலி என்றால் என்ன என்பதை உணர்ந்ததே இல்லையாம்.
கால் உடைந்து
ஏழு வயதில் மரியா தனது கணுக்காலை உடைத்துக் கொண்டபோதுதான் அவரால் வலியை உணர முடியாது என்பதை மருத்துவர் கண்டுபிடித்தாராம். இந்த மரபணு மாற்றம் எதனால் ஏற்படுகிறது என்பது மருத்துவ விஞ்ஞானிகளுக்கு இதுவரை விளங்கவில்லையாம் இதனை குணப்படுத்தவும் முடியாது என்கின்றனர்.
தலையில் காயம்
ஒருமுறை நான் கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அடுத்த முறை என்னுடைய முதுகில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. ஆனால் இந்த இரண்டின்போதும் நான் அழவில்லை. என் அம்மாவும் என்னை மருத்துவரிடம் அழைத்துச் செல்லவில்லை", என்கிறார் மரியா.
மூளையால் உணரமுடியாது
மரிசா போன்றவர்களுக்கு மற்றவர்களைப்போலவே இயல்பான தொடு உணர்வு இருக்கும். வெய்யிலின் வெக்கையையும், குளிரின் குளிர்ச்சியையும் இவர்களால் நன்கு உணரமுடியும். ஆனால் அவர்களின் உடலில் ஏற்படும் வலியின் ஆபத்தை அவர்களின் மூளையால் உணர முடிவதில்லை.
தீக்காயம் ஏற்பட்டாலும்
பனிக்காலத்தில் ஒருநாள் இவர் கதகதப்புக்காக மர அடுப்புக்கு பக்கத்தில் அமர்ந்து குளிர்காய்ந்து கொண்டிருந்தார். ஆனால் அவரது முதுகில் கொப்புளம் எழும் அளவுக்கு தீக்காயங்கள் ஏற்படுவதை அவர் உணரவே இல்லையாம்.
மரத்து போன மூளை
"என் மூளை ஆபத்தை எச்சரிக்கும் சமிக்ஞைகளை அனுப்ப மறுக்கிறது என்று அவர்கள் கூறுகிறார்கள். என்னுடைய காலில் இருந்து ஒரு நரம்பைக்கூட எடுத்து அவர்கள் பரிசோதனை செய்தார்கள். ஆனாலும் ஒன்றும் பயனில்லை," என்கிறார் மரிசா.
திருமணத்திற்குப் பின்
மரிசாவை திருமணம் செய்துகொண்ட பிறகே தனக்கு அவரது இந்த பிரச்சனை குறித்து தெரியவந்ததாக கூறுகிறார் மரிசாவின் கணவர் கிவானில்டோ அபரெசிதோ டி தொலேதோ.
வெறும் கையில்
"திருமணம் முடிந்து நாங்கள் எல்லோரும் வீட்டுக்கு திரும்பினோம். மரிசா சமைக்கத் துவங்கினார். அடுப்பில் இருந்த பாத்திரத்தை இறக்கும் நேரம் வந்தது. சூட்டைத்தடுக்கும் துணியை தேடினார். கிடைக்கவில்லை. கவலையே படாமல் கொதித்துக்கொண்டிருந்த வாணலியை வெறும் கைகளால் இறக்கிவைத்தார் மரிசா. அப்போது தான் அவருக்கு இந்த பிரச்சனை இருப்பது எனக்குத் தெரியும்", என்கிறார் மரிசாவின் கணவர்.
ஒட்டிக்கொண்ட கைகள்
இந்த சம்பவத்தில் மரிசா கையின் தோல் வாணலிக்கு ஒட்டிக்கொண்டு தொங்கியதும், அவர் கைகள் கொப்பளம் எழும்பியதும் அவரது கணவருக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. அதைவிட அதிர்ச்சி மரிசாவின் இந்த நிலைமை குறித்து சமூகத்தில் நிலவிய தவறான கருத்துக்கள்.
தூங்கிய பெண்
மயக்க மருந்து எதையும் எடுத்துக்கொள்ளாமல் மூன்று குழந்தைகளை பெற்றிருக்கிறார். மரிசா தனது இரண்டாவது குழந்தையை பெற்றுக்கொள்ளும் போது பிரசவ அறையில் தூங்கிவிட்டாராம். செவிலி வந்து அவரை சத்தம்போட்டு உலுக்கி எழுப்பிய பின்னரே குழந்தை பிறந்துள்ளது.
சகோதரருக்கும் பிரச்சினை
மரிசாவின் சகோதரர் ரெனால்டோவுக்கும் இதே பிரச்சனை இருக்கிறது. ஆனால் இவர்களின் மற்ற இரண்டு உடன்பிறந்தவர்களுக்கு இந்த பிரச்சனை இல்லை. அவர்களால் வலியை உணர முடிகிறது.
குழந்தைகளுக்கு பிரச்சினையில்லை
இந்த நிலைமை மரபணுக்கள் வழியாக பெற்றோரிடம் இருந்து பிள்ளைகளுக்கு வருகிறது என்றாலும், மரிசாவின் மூன்று குழந்தைகளுக்கும் இந்த பிரச்சனை இல்லை.
வலியை உணரவேண்டும்
வலி என்றால் என்ன என்று தெரிந்துகொள்ளவேண்டும் என்று மரிசா பெரிதும் விரும்புகிறார். "நான் வலியை உணர விரும்புகிறேன். அப்படி உணர்ந்தால் மருத்துவரை பார்ப்பேன். எனக்கு கணுக்கால் பிசகிய நிலையில் நான் சாதாரணமாக நடந்துகொண்டிருக்கமாட்டேன் என்கிறார் மரிசா. இதுபோன்ற பிரச்சனை உலகிலேயே வெறும் 40 அல்லது 50 பேருக்கு மட்டுமே இருப்பதாக தெரியவந்துள்ளது.