பொது இடத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாடக் கூடாது.. புரூனே சுல்தான் அதிரடி தடை!
புருனே: குட்டி நாடான புரூனேவில் கிறிஸ்துமஸ் விழாவை பொது இடங்களில் கொண்டாட அந்த நாட்டு சுல்தான் தடை விதித்துள்ளார். அப்படிக் கொண்டாடினால் அது இஸ்லாமியர்களின் மத நம்பிக்கையை சீர்குலைத்து விடும் என்றும் புரூனே சுல்தான் விளக்கம் அளித்துள்ளார்.
கிறிஸ்துமஸ் பாடல் பாடுவது, கிறிஸ்துமஸ் மரத்தை அலங்கரித்து வைப்பது, கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் வெளியில் வருவது, ஸ்டார்களை வீட்டுக்கு வெளியே தொங்க விடுவது போன்ற செயல்கள் இஸ்லாமுக்கு எதிரானது என்றும் புரூனே அரசு அறிவித்துள்ளது.
முழுக்க முழுக்க எண்ணெய் வளம் மிக்க நாடான புரூனேவில் மத ரீதியாக பல கட்டுப்பாடுகள் உள்ளன. அதில் ஒன்றாகத்தான் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை பொது இடத்தில் கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

மலேசியா அருகே
புரூனே ஒரு இஸ்லாமிய நாடு என்பது குறிப்பிடத்தக்கது. மலேசியாவுக்கு மிக நெருக்கத்தில் போர்னியா தீவில் இந்த நாடு அமைந்துள்ளது. இங்கு முஸ்லீம்கள் அல்லாதவர்கள் பிற பண்டிகைகளைக் கொண்டாட அனுமதி இல்லை.

சுல்தானின் உத்தரவு
புரூனே சுல்தான்.. அவரு முழுப் பெயர் ரொம்பப் பெரியது, பொதுவாக புரூனே சுல்தான் என்றுதான் அனைவரும் அழைக்கிறார்கள். எண்ணெய் வளம் மிக்க இந்த குட்டி நாட்டின் மக்கள் தொகை 4 லட்சத்து 20 ஆயிரம் ஆகும். இங்கு 65 சதவீத மக்கள் இஸ்லாமியர்கள்தான். புரூனே சுல்தான்தான் உலகிலேயே மிகவும் பணக்காரரும் ஆவார்.

வீட்டுக்குள் கொண்டாடலாம்
இருப்பினும் தங்களுக்குள், வீடுகளுக்குள் பண்டிகையைக் கொண்டாட தடை இல்லை. இருப்பினும் அதற்கும் கூட முதலிலேயே அதிகாரிகளிடம் அனுமதி வாங்கி விட வேண்டுமாம்.

பாட்டுப் பாடக் கூடாது
இதுகுறித்து அரசுத் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், கிறிஸ்துமஸ் பண்டிகை சமயத்தின்போது கிறிஸ்தவர்களின் நடைமுறைகளை இஸ்லாமியர்களும் பின்பற்றுவது அதிகரித்து வருகிறது. மெழுகுவர்த்தி ஏற்றுவது, கிறிஸ்துமஸ் மரத்தை அலங்கரிப்பது, கிறிஸ்துமஸ் பாடல்களைப் பாடுவது, ஸ்டார்களை தொங்க விடுவது , வாழ்த்து அனுப்புவது உள்ளிட்டவற்றால் இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

பொது இடத்தில் கூடவே கூடாது
இவை இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு எதிரானவை. இஸ்லாமியர்களின் நம்பிக்கையை தகர்ப்பவை. எனவே இவற்றை பொது இடத்தில் செய்ய முடியாது, செய்யக் கூடாது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

அதெப்படி சொல்லலாம்
ஆனால் இந்த உத்தரவுக்கு புரூனே மக்களிடையே, குறிப்பாக இஸ்லாமியர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதாம். பலர் டிவிட்டரில் இது குறித்தும் கமெண்ட் போட்டு வருகின்றனராம்.












Click it and Unblock the Notifications