ஷாக்!பல்கோரியாவில் தீப்பிடித்து எரிந்த பேருந்து..தூங்கிக்கொண்டிருந்த 12 குழந்தைகள் உட்பட 45 பேர் பலி
சோபியா: மேற்கு பல்கேரியாவில் இன்று காலை சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து திடீரென தீப்பிடித்து விபத்துக்குள்ளானதில் 12 குழந்தைகள் உட்பட 45 பேர் கொல்லப்பட்டனர்.
வடக்கு மாசிடோனியா நாட்டின் பேருந்து ஒன்று துருக்கியில் இருந்து பல்கேரியா வழியாகத் தாயகம் திரும்பிக் கொண்டிருந்தது. இந்த பேருந்தில் வடக்கு மாசிடோனியா நாட்டை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்தப் பேருந்து இன்று அதிகாலை தலைநகர் சோபியாவின் தென்மேற்கில் அமைந்துள்ள கிராமம் ஒன்றின் அருகே வந்து கொண்டிருந்த போது திடீரென விபத்தில் சிக்கியது.
சென்னை மேயர் யார்? உதயநிதி பிடிவாதம்! மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்! நடக்கப்போவது என்ன?
12 குழந்தைகள் பலி
துருக்கியிலிருந்து சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்ற இந்த பேருந்து அதிகாலை 2 மணியளவில் தலைநகர் சோபியாவின் தென்மேற்கில் உள்ள போஸ்னெக் கிராமத்திற்கு அருகே விபத்தில் சிக்கியுள்ளது. இந்தக் கோர விபத்தில் பேருந்து அப்படியே தீப்பற்றி முழுவதுமாக எரிந்தது. இதில் கொடூரமான விபத்தில் தூங்கிக் கொண்டிருந்த 12 குழந்தைகள் உட்பட மொத்தம் 45 பேர் கொல்லப்பட்டனர்.
7 பேர் தப்பினர்
பேருந்தில் இருந்து தப்பிய 7 பேர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக பல்கேரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், "பேருந்து தீப்பிடித்ததால் விபத்துக்குள்ளானதா அல்லது விபத்துக்குள்ளான பிறகு தீப்பிடித்ததா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்" என்றார். அந்நாட்டின் போக்குவரத்துத் துறை அதிகாரி கூறுகையில், "வாகனம் நெடுஞ்சாலைத் தடுப்புச் சுவரில் மோதியதாகவே தெரிகிறது. சாலையின் ஒரு பகுதியில் உள்ள தடுப்புச் சுவர் முற்றிலுமாக சேதமடைந்துள்ளது" எனத் தெரிவித்தார்.
என்ன காரணம்
இந்த விபத்து தொடர்பான வீடியோ காட்சிகளை அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. அதில் நெடுஞ்சாலையில் பேருந்து கொழுந்துவிட்டு எரிவது காட்சிகள் இடம் பெற்றுள்ளன. மேலும், எரியும் பேருந்தின் ஜன்னலில் இருந்து குதித்தும் சில பயணிகள் தப்பியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். டிரைவரின் தவறு அல்லது பேருந்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சம்பவ இடத்தில் பிரதமர்
அதிகாலையில் ஏற்பட்ட இந்த கோர விபத்து தொடர்பான தகவல் கிடைத்ததும் பல்கேரியாவின் இடைக்கால பிரதமர் ஸ்டீபன் யானேவ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அதிகாரிகளுக்குத் தேவையான அறிவுரைகளை வழங்கினார். இந்த விபத்து மிகவும் துக்கத்தைத் தருவதாகக் குறிப்பிட்ட அவர், இந்த துயர சம்பவத்தில் இருந்து பாடம் கற்றுக்கொள்வோம், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க முடியும் என்று நம்புகிறோம் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
வடக்கு மாசிடோனியா பிரதமர் இரங்கல்
அதேபோல வடக்கு மாசிடோனியா நாட்டின் பிரதமர் ஜோரன் ஸேவ் இந்த விபத்தில் உயிர் பிழைத்தவர்களில் ஒருவரிடம் பேசினார். பேருந்தில் தூங்கிக் கொண்டிருந்தவர்களைப் பயங்கர வெடிச்சத்தம் எழுப்பியதாகத் தப்பிய நபர் தன்னிடம் தெரிவித்தாக பிரதமர் ஜோரன் ஸேவ் தெரிவித்தார். விபத்தில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்த அவர், இந்த நிகழ்வு மிகப் பெரிய அதிர்ச்சி அளிப்பதாகத் தெரிவித்தார். மேலும் இந்த விபத்தில் உயிர் தப்பிய 6 போரும் பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து உயிர் தப்பியதாகவும் அவர் குறிப்பிட்டார். பல்கோரியா நாட்டில் ஏற்பட்ட இந்த கோர விபத்தில் சிறுவர்கள் உட்படக் குறைந்தபட்சம் 45 பேர் உயிரிழந்துள்ளது சர்வதேச அளவில் மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.