இந்தியாவிலும் உளவு பார்த்த கலிபோர்னியாவில் சுட்டுக் கொல்லப்பட்ட பெண் தீவிரவாதி!
நியூயார்க்: அமெரிக்காவில் தாக்குதல் நடத்தி சுட்டுக் கொல்லப்பட்ட பெண் தீவிரவாதி இந்திய நகரங்களிலும் உளவு பார்த்துள்ளார் என்று சவுதி அரேபியா உளவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் சான்பெர்னார்டினோவில் கடந்த வாரம் ஒரு தொண்டு நிறுவன விழாவில் புகுந்த கணவன், மனைவி சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தி 14 பேரை கொன்று குவித்தனர். தப்பி ஓடிய அவர்களை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
விசாரணையில் அவர் களது பெயர் சையத் ரிஷ்வான் பரூக் மற்றும் தஸ்பீன் மாலிக் என தெரிய வந்தது. அவர்களில் தஸ்பீன் மாலிக் பாகிஸ்தானை சேர்ந்தவள். அவளுக்கு அங்குள்ள தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கணவர் சையத் ரிஷ்வான் பரூக் அமெரிக்க குடியுரிமை பெற்றவர். தற்போது தஸ்பீன் மாலிக் குறித்து பல புதிய தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. இவருக்கு பாகிஸ்தானில் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருந்தது.
இந்த நிலையில் அமெரிக்கா வருவதற்கு ஒரு வருடத்துக்கு முன்பு அதாவது 2013 ஆம் ஆண்டில் சவுதி அரேபியா சென்றார். அங்கிருந்து இந்தியா சென்றார். அங்கு முக்கிய நகரங்களுக்கு சென்று உளவு பார்த்தார். இந்த தகவலை சவுதி அரேபியா உள்துறை செய்தி தொடர்பாளர் மன்சூர் துர்கி அமெரிக்க பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
மேலும் இதற்கு முன்பு கடந்த 2008 ஆம் ஆண்டிலும் தஸ்பீன் மாலிக் சவுதி அரேபியா வந்தார். அப்போது அங்கு தனது தந்தையை பார்க்க 9 வாரங்கள் தங்கியிருந்தார். அதன் பின்னர் பாகிஸ்தான் சென்றார். இதையடுத்து 2013 ஆம் ஆண்டு ஜூன் 8 ஆம் தேதி இந்தியா சென்ற அவர் அங்கு பல நகரங்களுக்கு சென்று உளவு பார்த்து விட்டு அக்டோபர் 6 ஆம் தேதி மீண்டும் பாகிஸ்தான் சென்றார் என்றும் தெரிவித்துள்ளார்.