வீடு கட்ட குழி தோண்டினால்.. அள்ள அள்ள வந்த அதிர்ச்சி.. கலங்கி போன ஓனர்.. பரபரப்பு சம்பவம்!
ஒட்டாவா: கனடாவில் புதிதாக வாங்கிய வீட்டில் பேஸ்மண்ட் அறை அமைப்பதற்காக பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்ட போது அதில் இருந்து பெரிய பெரிய எலும்புக்கூடுகள் கிடைத்ததால் தம்பதி அதிர்ச்சிக்குள்ளாகினர்.
"வீட்டை கட்டி பார், கல்யாணம் செய்து பார்'' என்பது பழமொழி... அந்த வகையில் தனிப்பட்ட ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் இன்றியமையாததாய் இவை உள்ளன. அதிலும் சிலரது தனிப்பட்ட லட்சிய கனவுகளில் தனக்கென சொந்த வீடு கட்டுவது விருப்ப தேர்வாக இருக்கும்.
அப்படிதான் கனடாவில், ஒருவர் தான் புதிதாக வாங்கிய வீட்டில் பேஸ்மேண்ட் அறை ஒன்றை உருவாக்க நினைத்துள்ளார். ஆனால் அவருக்கு எதிர்பாராத ஒரு பேரதிர்ச்சி அதில் காத்திருந்துள்ளது.

எலும்பு குவியல்கள்
அப்படி என்ன பேரதிர்ச்சி என்றால், பேஸ்மண்ட் அறைக்காக அந்த நபர் வீட்டுக்கு அடியில் தோண்டியபோது, அதில் இருந்து எண்ணற்ற எலும்புக்குவியல்கள் கிடைத்தது தான். கனடவின் ஒண்டாரியா பகுதியை சேர்ந்த தம்பதி கஸ்ஸிடி கேசல் மற்றும் எடோம் மர்ரிட். கணவன் மனைவிகளான இருவரும் புதிதாக ஒரு வீடு ஒன்றை வாங்கியுள்ளனர். தனது வீட்டை புதுப்பித்து, தரைதளத்தில் இரண்டு அடி ஆழம் மட்டுமே கொண்டதாக இருந்த சிறிய ஒரு பகுதியை மாற்றி புது அறையாக கட்ட முடிவு செய்தனர். இதற்காக அந்த அறையை ஆழமாக தோண்டும் முயற்சியில் ஈடுபட்டு இருந்தனர்.

அதிர்ந்து போன தம்பதியினர்
அப்போது பழைய பேப்பர்கள், தேவையற்ற பல பொருட்களும் அவர்கள் கையில் கிடைத்தன. அதையெல்லாம் பொருட்படுத்தாது அவர்கள் தோண்டிக்கொண்டு இருந்தனர். அப்போதுதான் யாரும் எதிர்பாரத வகையில் அவர்களுக்கு எலும்புக்கூடுகள் குவியல் குவியலாக கிடைத்தது. இதனால், பெரும் அதிர்ச்சி அடைந்த தம்பதி இருவரும், தோண்டும் பணியை அப்படியே கைவிட்டு விட்டனர். உடனடியாக சம்பவம் குறித்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அதிகாரிகளும் விரைந்து வந்து சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் அவர்கள் தோண்டிய போது கிடைத்த எலும்புக்கூடுகளை ஆய்வுக்கு எடுத்து சென்றனர்.

பறவை, விலங்கினங்களின் எலும்புகள்
எனினும் வீடு கட்டுவதற்காக மகிழ்ச்சியுடன் பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்ட தம்பதிக்கு எலும்புக்கூடுகள் கிடைத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், விலங்கியல் ஆய்வாளர்கள் முதற்கட்ட விசாரணையில், கனடா தம்பதி வீட்டில் இருந்து கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் விலங்குகளுடையது என்று தெரிவித்தனர். மேலும், அளவில் பெரிய உருவம் கொண்ட அன்னம் போன்ற பறவையின் எலும்புகளாக கூட இருக்கலாம் என்று கூறினர். மேலும், ஆரம்பகாலத்தில் இந்த வீடு எலும்புக்கூடுகள் அகற்றப்படாமல் கட்டப்பட்டு இருக்கும் எனவும் தெரிவித்தனர்.

நிம்மதி பெருமூச்சு
அதன்பிறகே வீட்டின் உரிமையாளர் நிம்மதி பெருமூச்சு விட்டார். இது குறித்து கசிடி கூறும் போது, தரைதளத்தில் இரண்டு அடி ஆழம் கொண்டதாக இருந்த சிறிய அறைக்கு வெளியில் இருந்து எந்த கதவும் கிடையது. எங்கள் வீட்டின் உள்புறம் மட்டுமே அதற்கு ஒரு கதவு இருந்தது. இதனால், இந்த எலும்புக்கூடுகள் எப்படியும் வெளியில் இருந்து வர வாய்ப்பு இல்லை என்று நாங்கள் கருதினோம். தற்போது, அதை அதிகாரிகளும் உறுதி செய்து விட்டனர்" என்றார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications