சோமாலியா ஹோட்டலில் தற்கொலைப்படை தாக்குதல்... 23 பேர் பலி, 30 பேர் படுகாயம்!
சோமாலியாவில் உணவுவிடுதி மீது தற்கொலைப்படையினர் நடத்திய தாக்குதலில் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.
மொகடிஷீ : சோமாலியாவின் தலைநகரில் உணவுவிடுதி மீது தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதல், துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 23 பேர் பலியாகியுள்ளனர்.
சோமாலியா நாட்டின் பல பகுதிகளில் அல் கொய்தா ஆதரவு பெற்ற உள்நாட்டு தீவிரவாதிகளான அல் ஷபாப் குழுக்கள் ஏராளமாக இயங்கி வருகின்றன. சோமாலியா அரசை கவிழ்த்துவிட்டு மிகவும் கண்டிப்பு நிறைந்த இஸ்லாமிய சட்டங்களின் அடிப்படையிலான ஆட்சியை நிறுவ வேண்டும் என்பதே இவர்களின் நோக்கமாக உள்ளது.

உள்நாட்டு ராணுவ வீரர்கள் மீது அவ்வப்போது அதிரடியாக தாக்குதல் நடத்தி தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். மத்திய ஆப்பிரிக்காவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவரும் பன்னாட்டு அமைதிப் படையினரையும் அல்ஷபாப் தீவிரவாத அமைப்பினர் கொன்று குவிக்கின்றனர்.
இந்நிலையில், சோமாலியா நாட்டின் தலைநகர் மொகடிஷு நகரில் உள்ள ஒரு பிரபல உணவகம் மீது சனிக்கிழமை இரவு அல் ஷபாப் தீவிரவாதிகள் இரண்டு கார் குண்டுகளால் தாக்குதல் நடத்தினர். அந்நாட்டின் உள்துறை அமைச்சருக்கு சொந்தமானது அந்த விடுதி என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
பாதுகாப்புப் படையினர் அந்த விடுதியில் தங்கி இருப்பதாக தீவிரவாத அமைப்பினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விடுதியின் கேட்டை தகர்த்து ஒரு கார் மூலம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
முதல் தாக்குதல் நடந்த சில நிமிடங்களிலேயே ஒரு மினிபஸ் மூலம் மற்றொரு வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூட்டிலும் ஈடுபட்டுள்ளனர். இந்தத் தீவிரவாதிகளின் தாக்குதல்களில் 23 பேர் பலியாகியுள்ளதாகவும், 30க்கம் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications