துருக்கியில் தீவிரவாதிகள் கார் குண்டு தாக்குதல்.. 13 ராணுவ வீரர்கள் பலியான சோகம்
துருக்கியில் வெடிகுண்டுகள் நிறைந்த கார் ராணுவ வீரர்கள் சென்ற பஸ் மீது மோதியது. இதில் ராணுவ வீரர்கள் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கேய்சரி : துருக்கியின் கேய்சரி பகுதியில் அந்நாட்டு ராணுவத்தினருடன் சென்ற பஸ் மீது வெடிகுண்டுகள் நிரம்பிய கார் மோதியது. இதில் 13 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
துருக்கியில் குர்திஷ் தீவிரவாதிகளும் ஜிகாதிக்களும் தொடர் தாக்குதல் மற்றும் குண்டு வெடிப்புகளை நிகழ்த்தி வருகின்றன. அண்மையில் இஸ்தான்புல்லில் நடந்த குண்டுவெடிப்பில் 44 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர்.
இந்நிலையில் கேய்சரி பகுதியில் உள்ள மார்க்கெட் பகுதிக்கு ராணுவத்தினர் பஸில் சென்றுக்கொண்டிருந்தனர். அப்போது வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட கார் ஒன்று பஸ் மீது வேகமாக மோதியது.
இதில் தீப்பிடித்து எரிந்த பஸ் அடையாளம் தெரியாத அளவுக்கு உருக்குலைந்து போனது. இந்த கொடூர தாக்குதலில் ராணுவ வீரர்கள் 13 பேர் கொல்லப்பட்டனர். 48 பேர் காயமடைந்தனர்.
இதனை அந்நாட்டு ராணுவமும் உறுதி செய்துள்ளது. துருக்கியில் குர்திஷ் தீவிரவாதிகள் மற்றும் ஜிகாதிக்கள் நடத்தி வரும் தொடர் தாக்குதல்களால் அந்நாட்டு மக்கள் பீதியடைந்துள்ளனர்.