கொரோனா.. லாக்டவுன்.. ரிப்பீட்டு! மீண்டும் கொரோனாவிடம் சிக்கிய சீனா.. பல நகரங்களில் ஊரடங்கு! பின்னணி
பெய்ஜிங்: உலக நாடுகள் கொரோனாவின் கோரப் பிடியில் இருந்து தப்பி மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வரும் நிலையில், சீனா மீண்டும் ஊரடங்குகளை அறிவித்து வருகிறது
Recommended Video
கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூஹான் நகரில் முதல்முறையாக கோவிட் 19 பரவ தொடங்கியது. அங்குத் தொடங்கிய இந்த பெருந்தொற்று, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு உலக நாடுகளை ஆட்டிப்படைத்துவிட்டது.
ஆல்பா, டெல்டா, ஓமிக்ரான் எனத் தொடர்ச்சியாகப் பல உருமாறிய கொரோனா வகைகள் உலகெங்கும் பரவி, மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது. சுமார் 2 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போது தான் உலக நாடுகள் மெல்ல இயல்பு நிலையை நோக்கித் திரும்பி வருகின்றனர்.

சீனா
ஆனால், சீனாவில் நிலைமை நேர்மாறாக உள்ளது. அங்கு கொரோனா பெருந்தொற்று தொடங்கியது முதல் 1.15 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது. மேலும், 4636 பேர் கொரோனாவால் பலியாகி இருந்தனர். கொரோனா பரவ தொடங்கிய பின்னர், பெரும்பாலும் சீனாவில் நிலைமை கட்டுக்குள்ளேயே இருந்தது. இருப்பினும், இப்போது நிலைமை அங்கு மாற தொடங்கி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சீனாவில் 1436 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது உலகின் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது குறைவாகத் தொடங்கினாலும், இதுவே சீன அதிகாரிகள் ஊரடங்கை அமல்படுத்த போதுமாக உள்ளது.

புதிய உருமாறிய கொரோனா?
கடந்த சில மாதங்களுக்கு முன்பு. உலகெங்கும் மின்னல் வேகத்தில் பரவிய ஓமிக்ரான் கொரோனா இதற்குக் காரணமா என்பதைச் சீனா இன்னும் அதிகாரப்பூர்வமாக விளக்கவில்லை. அதேபோல உலக சுகாதார அமைப்பும் சீனாவில் புதிய உருமாறிய கொரோனா உருவாகி உள்ளதா என்பது குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனவே, புதிய உருமாறிய கொரோனா எதுவும் இப்போது தோன்றவில்லை என்பது நமக்கு உறுதியாகத் தெரிகிறது. பின்னர் எதற்காகச் சீனா பல நகரங்களில் ஊரடங்கை அறிவித்து வருகிறது.

இது தான் காரணம்
உலகின் மற்ற நாடுகள் கொரோனா உடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்து, ஊரடங்கு கட்டுப்பாடுகளைத் தளர்த்தி வருகிறது. இருப்பினும், சீனா இன்னும் கூட "ஜீரோ கோவிட்" திட்டத்தையே பின்பற்றுகிறது. இதனால், சீனாவில் கொரோனா உறுதி செய்யப்படும் நபர்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். ஊரடங்குகள் அறிவிக்கப்படுகிறது, மக்களிடையே சோதனை நடத்தப்படுகிறது. போக்குவரத்து தடைகளும் அறிவிக்கப்படுகிறது. இதனால் உணவு போன்ற அடிப்படைத் தேவைகளுக்குக் கூட சீன மக்கள் அரசைச் சார்த்து இருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

சீன நகரங்கள்
சுமார் 90 லட்சம் மக்கள்தொகை கொண்ட தொழில்துறை நகரமான சாங்சுன் நகரில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் பெய்ஜிங்கில், பொதுமக்கள் வெளியேற அனுமதிக்கப்படவில்லை. ஷாங்காயில் உள்ள பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. வடகிழக்கு மாவட்டமான ஷுனியில் ஒருவருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதேபோல பல முக்கிய சீன நிறுவனங்களை அமைந்துள்ள ஷென்சென் நகரிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

கட்டாயம்
ஊரடங்கு மட்டுமின்றி சீனாவில் மாஸ்க், தனிமனித இடைவெளி ஆகியவையும் கடுமையாகப் பின்பற்றப்படுகிறது. இதுபோன்ற கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து பின்பற்றுவதன் மூலம் கொரோனா பாதிப்பைக் கட்டுக்குள் வைத்திருக்க முடிவதாகச் சீனாவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல சீனாவுக்குள்ளே பயணம் செய்யும் பயணிகளுக்கு 15 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலும் தொடர்கிறது. உலகெங்கும் கொரோனாவின் தீவிர தன்மை குறைந்து வருவதால், பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்படும் போதிலும், சீனாவின் நிலைப்பாடு இந்த விஷயத்தில் இப்போது மாறுவதாகத் தெரியவில்லை.












Click it and Unblock the Notifications