குறிப்பிட்ட பிரிவினருக்கு.. கொரோனா தடுப்பூசி செலுத்த ஆரம்பித்த சீனா.. 1 மாதம் ஆச்சு.. செம பிளான்
பீஜிங்: கொரோனா வைரஸ் தடுப்பூசியை கடந்த ஒரு மாதமாக பயன்படுத்தி வருகிறது சீனா. குறிப்பாக, முன் களப் பணியாளர்களுக்கு இந்த தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் வூஹான் மாகாணத்தில் முதல்முறையாக கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. இதன் பிறகு உலகம் முழுக்க அது மிக வேகமாக பரவியுள்ளது. இந்த வைரஸ் காரணமாக பல லட்சம் மக்கள் பலியாகி உள்ள நிலையில், இந்தியா உட்பட பல நாடுகளிலும் பொருளாதாரங்கள் மிகப் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது.
இந்தியாவில் 30 லட்சம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அமெரிக்கா, பிரேசில் நாடுகளுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது.
சென்னையில் மீண்டும்...கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பு... தேவை பரிசோதனை!!
சீனா முடிவு
கொரானா வைரசுக்கு எதிரான தடுப்பூசியை உலகம் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. ஆக்ஸ்போர்டு உள்ளிட்ட 7 கொரானா தடுப்பூசி மருந்துகள் மூன்றாவது கட்ட பரிசோதனை நிலையில் உள்ளன. இதில் 4 மருந்து நிறுவனங்கள் சீன நாட்டைச் சேர்ந்ததாகும். இரண்டு கட்ட பரிசோதனைகளில், இந்த மருந்தை எடுத்தவர்களுக்கு, எந்த பாதிப்பும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், சீனா துணிச்சலாக ஒரு முடிவு எடுத்துள்ளது. கடந்த ஜூலை 22ம் தேதி முதல் மருத்துவத் துறை பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி துவங்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி ஆரம்பம்
நோயாளிகளுடன் நெருக்கத்தில் இருக்க வேண்டிய நிலைமையில் இவர்கள் இருக்கிறார்கள் என்பதும், மருத்துவ பணியாளர்கள் மூலமாக மேலும் பல மக்களுக்கும் நோய்கள் பரவும் நிலை இருப்பதாலும், முதலில் இவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து தடுப்பூசி செலுத்த ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பொதுவாக, மூன்று கட்ட பரிசோதனைகள் முடிவடைந்த பிறகுதான் உலக சுகாதார அமைப்பு, தடுப்பூசிகளை, வணிகரீதியாக பயன்பாட்டுக்கு வருவதற்கு அனுமதி வழங்கும். எனவே, சீனா தனது நாட்டு மருத்துவ ஊழியர்களுக்கு மட்டும் இந்தத் தடுப்பூசி பயன்படுத்த தொடங்கியுள்ளது.
சீனாவில் குறைவு
சீனாவின் அதிகாரப்பூர்வ அறிவிப்புபடி, கடந்த ஒரு மாதமாகவே (உண்மையோ பொய்யோ, சீனாவுக்குத்தான் வெளிச்சம்) அங்கு தினசரி பாதிப்பு என்பது 20, 30 என்ற அளவில்தான் இருக்கிறது. எப்படியும் நாளொன்றுக்கு 50 பேரை தாண்டுவது கிடையாது. உலகின் மிகப்பெரிய மக்கள்தொகை கொண்ட நாட்டில் இந்த அளவுக்கு வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதற்கு மக்களின் விழிப்புணர்வு மட்டுமின்றி இதுபோல தடுப்பூசி போடப்பட்டது ஒரு காரணமாக இருக்கலாமோ என்ற கருத்து எழுந்துள்ளது.
அவசர தடுப்பூசி
தேசிய சுகாதார ஆணையத்தின் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு மையத்தின் இயக்குனர் ஜெங் ஜாங்வே, சீன அரசு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், சீனாவில் அவசர தேவைகளுக்காக தடுப்பூசி போடப்பட்டு வருவதை உறுதி செய்துள்ளார்.
சீனாவின், சினோபார்ம் நிறுவனம் உருவாக்கிய தடுப்பூசி போடப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
உணவக பணியாளர்கள்
அடுத்த கட்டமாக, இந்த தடுப்பூசி உணவக பணியாளர்கள், அத்தியாவசியப் பொருள் விற்பனை செய்யும் கடைகளில் பணியாற்றுவோர், போக்குவரத்து ஊழியர்கள் உள்ளிட்டோருக்கும் வழங்கப்படுவதற்கான நடவடிக்கை துவங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. பிற நாடுகளுக்கு மருத்துவ சேவை செய்வதற்காக செல்லக்கூடிய சீனாவின் மருத்துவப் பணியாளர்களும், இந்த தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். இது நல்ல பலனை கொடுப்பதாக தெரியவருகின்றது.
தடுப்பூசி கொடுக்கலாமே
இந்தியாவிடம் ஏற்கனவே, சிரம் நிறுவனம், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தயாரிக்கும் தடுப்பூசிகளை, இப்போதே பெருமளவுக்கு தயார் செய்ய ஆரம்பித்து விட்டதாக கூறப்படுகிறது. மூன்றாவது கட்ட பரிசோதனைகள் முடிவடைந்ததும், அனைவருக்கும் எளிதாக தடுப்பூசி சென்று சேர்வதற்கு இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில்தான், உலகம் முழுக்கவே இரண்டு டிரையல்கள் முடிவடைந்த தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்த ஆரம்பிக்கலாம் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
இந்தியா முடிவு
சீனா பரிசோதனை முயற்சியாக அதை ஆரம்பித்துவிட்டது. இரண்டு கட்ட பரிசோதனைகளில் எந்த பக்க விளைவும் ஏற்படவில்லை என்று தெரிய வந்த பிறகும், எதற்காக இன்னும் காத்திருக்க வேண்டும் என்ற கேள்வி பல மூலைகளிலும் எழுகிறது. ஏற்கனவே இரண்டு கட்ட தடுப்பூசிகளை முடித்துவிட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்துவிட்டது ரஷ்யா. எனவே, இந்தியாவும் அது போன்ற நடவடிக்கைகளை எடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. விருப்பப்பட்டவர்களுக்கு மட்டும் இந்த தடுப்பூசிகளை எடுத்துக்கொள்ள அனுமதிக்கலாம், அல்லது சீனாவை போல மருத்துவத் துறை பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசிகளை கொடுக்க ஆரம்பிக்கலாம் என்று சுகாதாரத் துறை வல்லுநர்கள் கருதுகிறார்கள்.