திபெத் விவகாரம்..இந்தியா எங்களுக்கு ஆதரவு.. நீங்க ஏன் தலையிடுறீங்க..இந்திய ஊடகங்களுக்கு சீனா கண்டனம்
பீஜிங்: கடந்த 2003-ம் ஆண்டு திபெத்தை சீனாவின் ஒரு பகுதியாக இந்திய அரசு அங்கீகரித்து விட்டதாகவும், இந்திய ஊடகங்கள் திபெத் விவகாரம் தொடர்பாக தேவையற்ற கருத்துக்களை வெளியிட வேண்டாம் என சீனா வலியுறுத்தி உள்ளது.
அமெரிக்காவில் சீனாவுக்கு எதிராக 'திபெத் கொள்கை மற்றும் ஆதரவு சட்டம் 2020' என்கிற சட்டம் அண்மையில் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து சீனா இந்த அறிக்கையை வெளியிட்டு உள்ளது.
இந்திய ஊடகங்கள் சீனா-இந்தியா இருதரப்பு உறவுகளை நகர்த்த உதவுவதற்கு முயற்சி செய்ய வேண்டும் என சீனா கேட்டு கொண்டுள்ளது.
திபெத்
சீனாவின் பகுதியா?
சீனா கடந்த 1959-ம் ஆண்டு திபெத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. இதனால் திபெத்தை ஆண்டு வந்த தலாய்லாமா அங்கிருந்து தப்பி இந்தியாவில் அடைக்கலமாகினார்.13-ம் நூற்றாண்டிலிருந்து திபெத் தங்கள் நாட்டின் ஒரு அங்கம் என்றும் அது எப்போதும் நிலைத்திருக்கும் என்றும் சீனா கூறி வருகிறது.
அமெரிக்கா குற்றச்சாட்டு
திபெத்தின் மத மற்றும் கலாசார விவகாரங்களில் சீனா தலையிடுவதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. ஆனால் திபெத் பிரச்சினையில் தலையிடுவது மூலம் அமெரிக்கா சீனாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதாக கூறி சீனா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
சீனாவுக்கு எதிராக சட்டம்
சீனாவின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் ‘திபெத் கொள்கை மற்றும் ஆதரவு சட்டம் 2020' என்கிற சட்டம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் அண்மையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின் முக்கிய நோக்கம் திபெத்தின் அடுத்த தலாய்லாமாவை சீனாவின் குறுக்கீடு இல்லாமல் புத்த சமூகத்தினர் மட்டுமே தேர்வு செய்வதை உறுதிப்படுத்துவதாகும்.
சீனா அறிக்கை
இந்த நிலையில் அமெரிக்காவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்தியாவே திபெத்தை சீனாவின் ஒரு பகுதி என அங்கீகரித்து விட்டதாகவும் கூறி சீனா அறிக்கை வெளியிட்டு உள்ளது. இது தொடர்பாக சீன தூதரக செய்தித் தொடர்பாளர் ஜி ரோங் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-
இந்தியாவே ஒப்புகொண்டது
அமெரிக்காவில் திபெத் கொள்கை மற்றும் ஆதரவு சட்டம் 2020-ஐ ஆதரித்து சில இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன. 2003 ஆம் ஆண்டில் இந்தியாவும்-சீனாவும் கையெழுத்திட்ட "உறவுகள் மற்றும் விரிவான ஒத்துழைப்புக்கான கோட்பாடுகள் பற்றிய பிரகடனத்தின் கீழ் திபெத் தன்னாட்சி பிராந்தியத்தை சீன பிரதேசத்தின் ஒரு பகுதியாக இந்தியா அதனை அங்கீகரிக்கிறது என கூறப்பட்டு இருக்கிறது.
தலையிடாதீர்கள்
எனவே சில இந்திய ஊடகங்கள் சீனாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு தொடர்பான பிரச்சினைகளில் ஒரு புறநிலை மற்றும் நியாயமான நிலைப்பாட்டை எடுக்கும் என்று நம்புகிறோம். சீனாவின் உள் விவகாரங்களில் தலையிடுவதற்கும், இருதரப்பு உறவுகளை மேலும் சேதப்படுத்துவதற்கும் அமெரிக்காவுக்கு ஆதரவாக திபெத் விவகாரத்தை கையில் எடுக்காதீர்கள்.
உறவை மேம்படுத்துங்கள்
அதற்கு பதிலாக இந்த பிரச்சினைகளின் மிக முக்கியமான தன்மையைப் புரிந்துகொள்வது, சீன பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்தை புறநிலையாகப் பார்ப்பது, சீனா-இந்தியா இருதரப்பு உறவுகளை நகர்த்த உதவுவதற்கு முயற்சி செய்யுங்கள் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.