இந்தோனேசியாவில் விபத்துக்குள்ளான விமானத்தில் ரூ.3 கோடி ரொக்கம்
ஜகார்தா: இந்தோனேசியாவில் விபத்துக்குள்ளான விமானத்தில் ஏழை மக்களுக்கு அளிக்க வைத்திருந்த ரூ. 3 கோடி பணம் இருந்துள்ளது.
இந்தோனேசியாவின் பப்புவா மாகாண தலைநகர் ஜெயபுராவில் இருந்து 54 பேருடன் ட்ரிகானா ஏர் சர்வீஸ் விமானம் ஒன்று ஓக்சிபிலுக்கு ஞாயிற்றுக்கிழமை கிளம்பியது. விமானம் கிளம்பிய 30 நிமிடங்களில் அது ராடாரில் இருந்து மாயமானது. இந்நிலையில் விமானம் பிங்டாங் மாவட்டத்தில் உள்ள மலை மீது மோதி விபத்துக்குள்ளானது தெரிய வந்துள்ளது.
விமானத்தின் பாகங்கள் மற்றும் பயணிகளின் உடல்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் விமானத்தில் பயணம் செய்த 4 பேர் ரூ.3 கோடி ரொக்கத்தை வைத்திருந்தது தெரிய வந்துள்ளது. பிங்டாங் மாவட்ட கிராமங்களில் வசிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு அளிக்க அரசு சார்பில் அந்த பணத்தை அவர்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.
பணத்திற்கும் விபத்திற்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா என்று எதுவும் தெரியவில்லை. ட்ரிகானா விமானம் விபத்துக்குள்ளான பகுதியில் கடந்த ஆண்டு சூப்பர் பூமா ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.
பிங்டாங் மாவட்டத்தில் விமானங்கள் பெரும்பாலும் மோசமான வானிலை காரணமாக விபத்துக்குள்ளாவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்த அனைவரும் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.