கஸ்டம்ஸ் சோதனையால் நேபாள ஏர்போர்ட்டில் குவிந்து கிடக்கும் நிவாரணப் பொருட்கள்
காத்மாண்டு: நேபாள விமான நிலையத்தில் நிவாரணப் பொருட்ளை சுங்கத்துறையினர் சோதனை செய்த பிறகே அனுமதிப்பதால் மீட்பு பணிகள் தாமதமாகியுள்ளன.
கடும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்தில் பல்வேறு நாடுகளில் இருந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் காத்மாண்டு விமான நிலையத்தில் வந்திறங்கும் நிவாரணப் பொருட்கள் சுங்கத்துறையினர் சோதனை செய்த பிறகே நாட்டுக்குள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகிறது. சுங்கத்துறை சோதனைக்காக விமான நிலையத்தில் நிவாரணப் பொருட்கள் குவிந்து கிடக்கிறது.
இந்த சோதனை விதிமுறையால் நிவாரண உதவி செய்யும் பணி தாமதமாகியுள்ளது. நேபாள அரசு வழக்கமான விதிமுறைகளை தற்போது தகர்க்கலாம் என்று ஐ.நா. பரிந்துரைத்துள்ளது.
டூனா, மேயோனீஸ் போன்ற தேவையில்லாத பொருட்களும் வருவதால் நிவாரணப் பொருட்களை கட்டாயம் சோதனை செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக நேபாள அரசு தெரிவித்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள நிவாரணப் பொருட்களில் இன்னும் கொஞ்சம் மட்டுமே சோதனை செய்யப்பட வேண்டி உள்ளது என்று காத்மாண்டு விமான நிலையத்தில் உள்ள அவசர மைய பொறுப்பாளரான சிவில் விமான போக்குவரத்து துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.