இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது முதல் ரஃபேல் போர் விமானம்! பிரான்சுக்கே சென்று பெற்றார் ராஜ்நாத் சிங்
Recommended Video
டெல்லி: பிரான்சிடம் இருந்து ரஃபேல் போர் விமானங்களை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று பெற்றுக் கொண்டார். முன்னதாக பாரீஸில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை ராஜ்நாத் சிங் சந்தித்து பேசினார்.
பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரூ60,000 கோடி மதிப்பில் 36 ரஃபேல் போர் விமானங்களைப் பெற பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு 2016-ல் ஒப்பந்தம் செய்தது. பிரான்சில் தயாரிக்கப்பட்ட முதல் ரஃபேல் போர் விமானம், விஜயதசமி நாளான இன்று அதிகாரப்பூர்வமாக இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

பிரான்ஸின் பார்டியாக்ஸ் நகருக்கு அருகே உள்ள மெரிக்னாக் விமான படை தளத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இந்த போர் விமானத்தை முறைப்படி பெற்றுக் கொண்டார்.

இதற்காக 3 நாள் பயணமாக பிரான்ஸ் சென்று அவர், பாரீஸ் நகரில் இருந்து விழா நடைபெறும் விமான படை தளத்துக்கு பிரான்ஸ் போர் விமானத்தில் பயணித்தார். ரஃபேல் போர் விமானத்துக்கு ஆயுத பூஜை வழிபாடு நடத்தப்பட்டது. ரபேல் விமானத்தை பூக்களால் அலங்கரித்து, எலுமிச்சை பழங்களை விமானத்தின் சக்கரத்துக்கு அடியில் வைக்கப்பட்து.. அத்துடன் தேங்காய் பழங்கள் வைத்து ஆயுதபூஜை நடத்தப்பட்டது.

அதன்பின்னர் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ரபேல் விமானததில் உயரப்பறந்து ஆய்வு செய்தார். நமது நாட்டின் வான்படை உருவாக்கப்பட்ட நாளை முன்னிட்டு இந்நிகழ்வு சிறப்பாக நடந்தது.

முன்னதாக பாரீஸ் நகரில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்தித்து பேசினார் ராஜ்நாத்சிங். இச்சந்திப்பில் இருதரப்பு பாதுகாப்பு, ராணுவ உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. மேலும் பிரான்ஸின் பாதுகாப்பு தளவாட உற்பத்தி நிறுவனங்களின் முதன்மை செயல் அதிகாரிகள் கூட்டத்தில் நாளை (புதன்கிழமை) உரையாற்றும் ராஜ்நாத்சிங், மேக் இன் இந்தியா திட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்க இருக்கிறார்.












Click it and Unblock the Notifications