மீண்டும் பெரியம்மை! – அபாயகரமான வைரஸ்கள் அடங்கிய 6 குப்பிகள் அமெரிக்காவில் கண்டுபிடிப்பு
வாஷிங்டன்: உலகின் பல்வேறு மூலைகளிலும் பரவி போர்களைவிட அதிகமாக மக்களைக் கொன்று குவித்த பெரியம்மை நோய் வைரஸ்கள் அடங்கிய ஆறு குப்பிகள் கண்டறியப்பட்டு பீதியைக் கிளப்பியுள்ளன.
அம்மை வகையினைச் சேர்ந்த உயிர்க்கொல்லியான பெரியம்மை நோயானது 1980களிலேயே உலகில் இருந்து முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டது.
இதுபற்றிய செய்திகளையும் மருத்துவக் குறிப்புகள் தெரிவித்து வந்துள்ளன.
அழிக்கப்பட்ட பெரியம்மை:
மனிதர்களை கடுமையாக தாக்கி, அழிக்கும் நோய்த்தொற்றுகளில் முழுவதுமாக அழிக்கப்பட்ட ஒன்றாக பெரியம்மை மருத்துவ நிபுணர்களால் கூறப்பட்டு வந்தது.
பயங்கரமான நோய்த் தொற்று:
பயங்கரமான நோய்கிருமிகளில் பெரியம்மை வைரஸ் மட்டும்தான் முழுமையாக அழிக்கப்பட்டது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
தடுப்பூசி மேம்பாடு:
ரஷ்யா மற்றும் அமெரிக்காவில் மிகுந்த பாதுகாப்பு கொண்ட இரு ஆய்வகங்களில் மட்டும் பெரியம்மை வைரஸ் குறித்த ஆய்வுகளும், தடுப்பூசி மேம்பாடுகளும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
கடும் பாதுகாப்புடன் ஆய்வு:
இவற்றிலுமே கூர்ந்த கண்காணிப்பையும், நெருங்கிய மேற்பார்வை நடவடிக்கைகளையும் விஞ்ஞானிகள் தொடர்ந்து வருகின்றனர்.
பெரியம்மை வைரஸ்கள்:
இப்படிப்பட்ட நிலையில் வாஷிங்டனில் அமைந்துள்ள என்.ஐ.ஹெச் பெதெஸ்டாவில் உள்ள உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகம் பற்றிய ஆய்வகத்தில், அலமாரி ஒன்றில் இருந்து பெரியம்மை வைரஸ்கள் அடங்கிய ஆறு குப்பிகள் கண்டறியப்பட்டுள்ளன.
வைரஸ் குப்பிகள்:
இந்த வைரஸ் குப்பிகள் அனைத்தும் உறைந்த, உலர்ந்த மற்றும் சீலிடப்பட்ட நிலையில் காணப்பட்டன. 1950 ஆம் ஆண்டினை ஒட்டிய மாதிரிகளாக இவை இருக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
துரத்தும் பயம்:
இந்த கண்டுபிடிப்பு குறித்து உலக சுகாதார அமைப்பும், நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டிற்கான அமெரிக்க மையமும் தங்களது கவலைகளை வெளியிட்டுள்ளன.
ஆய்வுகளின் பிடியில் வைரஸ்கள்:
எனினும் இந்த குப்பிகளால் பணியாளர்களுக்கோ, பொதுமக்களுக்கோ எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை என்று உறுதியளித்துள்ள நோய்த் தடுப்பு மையம் இந்த குப்பிகள் மேலும் சில ஆய்வுகளுக்காக கட்டுப்பாடன இடத்தில் வைக்கப்பட்டுள்ளன என்று கூறியுள்ளது.
அழிக்கப்படும் பயமில்லை:
ஆய்வுப் பரிசோதனைகள் முடிந்ததும் உலக சுகாதாரக் கழகத்தின் மேற்பார்வையில் இவை யாவும் அழிக்கப்பட்டுவிடும் என்றும் இம்மையம் தெரிவித்துள்ளது.