சட்ட விரோத குடியேறிகள் வாக்களித்ததால் நாடு தழுவிய அளவில் பின்னடைவு!- ட்ரம்ப்
நியூயார்க்(யு.எஸ்): அடுத்த அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஆறேகால் மணிக்கெல்லாம் ட்விட்டரில் உட்கார்ந்து அதிரடியாக கருத்துக்கள் தெரிவித்துள்ளார்.
"எனது வெற்றி உரைக்கு முன்னதாக ,ஹிலரி க்ளிண்டன் என்னை அழைத்து பேசிய போதே அவருடைய தோல்வியை ஒப்புக்கொண்டதாகவே கருத வேண்டும். எதுவும் மாறப்போவதில்லை," என்று முதலில் ட்விட்டினார்.
"நமது அடுத்த அதிபர் ட்ரம்ப் தான். நாட்டை வழி நடத்த, திறந்த மனதுடன் அவருக்கு
அனைவருடைய ஒத்துழைப்பு தேவை. எக்கச்சக்கமான பணமும் நேரமும் செலவாகும். ஆனால் முடிவு மாறப்போவதில்லை," என்று அடுத்த ட்விட்டில் கூறியுள்ளார்.
விஸ்கான்ஸின் மாநிலத்தில் மறுவாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ள நிலையில் ட்ரம்பின் இந்த ட்விட்டுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. மறுவாக்கு எண்ணிக்கை தனக்கு பாதகமாக இருக்குமோ என்ற எண்ணத்திலும் இந்த ட்விட்டுகள் இருக்கக் கூடும்.
நாடு தழுவிய அளவில் ட்ரம்பை விட 2 மில்லியன் வாக்குகள் கூடுதலாக ஹிலரி க்ளிண்டன் பெற்றுள்ளார். அது குறித்து ட்ரம்ப் கூறுகையில், "சட்டத்திற்கு புறம்பாக குடியேறியவர்கள் வாக்களித்துள்ளதால் ஹிலரி அதிக வாக்குகள் பெற்றுள்ளார். அதை தடுத்திருந்தால் தனக்கு நாடு தழுவிய பொது வாக்குகள் அதிகம் கிடைத்திருக்கும்," என்றும் ட்விட்டரில் கூறியிருக்கிறார்.
தவிர, மறுவாக்கு எண்ணிக்கை என்பதே பெரிய ஊழல் என்றும் முன்னதாக கருத்து
தெரிவித்துள்ளார். க்ரீன் கட்சி ஜில் ஸ்டைன் , கட்சி நிதி திரட்டுவதற்கு மறுவாக்கு எண்ணிக்கையை கையில் எடுத்துள்ளார்.
மறுவாக்கு எண்ணிக்கைக்கு ஒவ்வொரு மாநிலத்திற்கும் குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும். விஸ்கான்ஸின் மாநிலத்தில் 500 ஆயிரம் டாலர்களை அவர் செலுத்தியுள்ளார். மறுவாக்கு எண்ணிக்கைக்கு ஆதரவளித்து 5 மில்லியன் டாலர்களுக்கும் மேலாக இது வரை நிதி குவிந்துள்ளது.
இந்த நிதி மறுவாக்கு எண்ணிக்கைக்கு உரிய செலவினங்களுக்கு மட்டுமே செலவிடப்படும் என்று ஜில் ஸ்டைன் தெரிவித்துள்ளார்.
ஹிலரி க்ளிண்டனின் தேர்தல் குழுவும் ஜில் ஸ்டைனின் மறுவாக்கு எண்ணிக்கையில் இணைந்து கொள்ளப்போவதாக அறிவித்துள்ளனர்.
குறிப்பிட்ட சில கவுண்டிகளில் எண்ணிக்கை முறைகேடுகள் நடந்துள்ளதாக, அதிபர் தேர்தலை உன்னிப்பாக கவனித்து வரும் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மிஷிகனில் திங்கட்கிழமை வரையிலும், பென்சில்வேனியாவில் புதன்கிழமை வரையிலும் மறு எண்ணிக்கைக்கான விண்ணப்பத்திற்கு கடைசி நாளாகும். ஜில் ஸ்டைன் இந்த இரண்டு மாநிலங்களிலும் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வைப்பதில் தீவிரமாக இருக்கிறார்.
விஸ்கான்ஸின் மறு எண்ணிக்கை எப்படி இருக்கப்போகிறது? மீதி இரண்டு மாநிலங்களில் கோரிக்கை ஏற்கப்படுமா ? போன்ற கேள்விகள் எழுந்துள்ளன. தேர்தல் களேபரம் ஓய்ந்த பின்னர் கூட இந்த வாரம் அமெரிக்க அதிபர் தேர்தலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
-இர தினகர்