மூன்றாவது முறையாக கருத்தரித்தார் வில்லியம் மனைவி கேட்!
இங்கிலாந்து அரண்மனையின் இளவரசர் வில்லியம்- கேட் தம்பதியினர் தங்களது மூன்றாவது குழந்தையை வரவேற்க காத்திருக்கின்றனர்.
லண்டன்: இங்கிலாந்து இளவரசர் வில்லியத்தின் மனைவி கேட் மிடில்டன் தற்போது கர்ப்பமாக உள்ளதால் அத்தம்பதிக்கு மூன்றாவது குழந்தை பிறக்கவுள்ளது.
வில்லியம்-கேட் மிடில்டன் தம்பதிக்கு கடந்த 2011-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் அவர்களுக்கு முதல் குழந்தையான இளவரசர் ஜார்ஜ் கடந்த 2013-ஆம் ஆண்டு ஜூலை மாதம் பிறந்தார்.
இதைத் தொடர்ந்து அவர்களுக்கு சார்லட் என்ற பெண் குழந்தை கடந்த 2015-ஆம் ஆண்டு பிறந்தது. பிரிட்டிஷ் முடிக்குரிய வாரிசு வரிசையில் இந்தப் பெண் குழந்தை நான்காவது இடத்தில் உள்ளது.
முதல் குழந்தைக்கு 4 வயது
தற்போது முதல் குழந்தைக்கு 4 வயதும், இரண்டாவது குழந்தைக்கு 2 வயதும் ஆகிறது. இந்நிலையில் கேட் மிடில்டன் தற்போது மூன்றாவது முறையாக கர்ப்பம் தரித்துள்ளார். இதை கென்சிங்டன் அரண்மனை வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.
|
விரைவில் குழந்தை
இதனால் விரைவில் அவர்களுக்கு 3-ஆவது குழந்தை பிறக்கவுள்ளது. இந்த செய்தியை கேட்டு அரச குடும்பமே மகிழ்ச்சியில் திளைத்துள்ளது. வில்லியமின் மூன்றாவது குழந்தை பிரிட்டிஷ் முடிக்குரிய வாரிசு வரிசையில் 5-ஆவது இடத்தை பெறும். தற்போது அவர்களது முதல் மகன் ஜார்ஜ் பள்ளி செல்கிறார்.
கவனிப்பு
கேட் மிடில்டனுக்கு தன்னுடைய இருமுறை கர்ப்பம் தரித்த போது அவருக்கு ஏற்பட்ட வாந்தி, தொடர் குமட்டல் உள்ளிட்டவற்றால் அவருக்கு நீர் சத்து குறைபாடு ஏற்பட்டு உடல் எடையும் குறைந்தது. இதனால் தற்போது 3-ஆவது முறையும் அதுபோல் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால் அவரை அரண்மனையில் கண்ணும் கருத்துமாக பார்த்து வருகின்றனர்.
திட்டத்தை ரத்து செய்தார்
இதனால் லண்டனில் உள்ள குழந்தைகள் மருத்துவமனைக்கு மரியாதை நிமித்தமாக செல்லும் நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டார் கேட். கடந்த 1952-இல் இங்கிலாந்து ராணியாக மகுடம் சூட்டிக் கொண்ட ராணி எலிசபெத் 2 பிரிட்டன் வரலாற்றில் நீண்ட காலமாக ஆட்சி செய்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு 4 குழந்தைகள், 8 பேர குழந்தைகள் மற்றும் 5 கொள்ளு பேரக் குழந்தைகள் உள்ளனர்.