அதிதீவிர பழமைவாதி, ஈராக் போர் கைதிகள் படுகொலையில் தொடர்பு.. ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி யார் இவர்
தெஹ்ரான்: ஈரான் நாட்டில் நடைபெற்ற தேர்தலில் வென்று புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இப்ராஹிம் ரைசிக்கு பல முக்கிய தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ஈரான் நாட்டில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிபர் தேர்தல் நடைபெறும். கடந்த 2017ஆம் ஆண்டு முதல் ஈரான் அதிபராக உள்ள ஹாசன் ரோஹானியின் பதவிக்காலம் விரைவில் முடிவடைகிறது.
இதையடுத்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்க அங்கு ஜூன் 18ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. இந்தத் தேர்தலில் 60 வயதான இப்ராஹிம் ரைசி என்பவர் வெற்றி பெற்றுள்ளார்.

புதிய அதிபர்
இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகளில் சுமார் 62% வாக்குகள் இப்ராஹிம் ரைசிக்கு கிடைத்துள்ளது. இப்ராஹிம் ரைசி 1980ஆம் ஆண்டு, தனது 20ஆவது வயதில் கராஜின் வக்கீல் ஜெனரலாக ஆனார். இளம் வயதிலேயே அந்த பதவியை அடைந்ததைப் பலரும் பாராட்டினர். அப்போது முதலே ஈராக் அரசியலில் கவனிக்கப்பட வேண்டிய நபர்களில் ஒருவராக உருவானார் இப்ராஹிம் ரைசி.

யார் இவர்
கடந்த 2004 முதல் 2014 வரை நீதித்துறையின் முதல் துணைத் தலைவராகச் செயல்பட்டார். மேலும், 2014 முதல் 2016 வரை ஈரானின் வழக்கறிஞர் ஜெனரலாகவும் இருந்தார். அதைத் தொடர்ந்து கடந்த 2019இல் நீதித்துறைத் தலைவராக அறிவிக்கப்பட்டார். இருப்பினும் ஈரான்-ஈராக் போருக்குப் பின்னர் 1988 ஆம் ஆண்டில் ஆயிரக்கணக்கான போர் கைதிகளைப் படுகொலை செய்ததில் அவருக்குப் பங்கு இருப்பதாகவும் குற்றச்சாடுகள் உள்ளன.

புரட்சிப் படை
இப்ராஹிம் ரைசிக்கும் இஸ்லாமியப் புரட்சிகர காவல்படைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. அந்த குழுவின் குட்ஸ் படையின் தலைவராக இருந்த சுலைமாணியை தான் கடந்த ஆண்டு அமெரிக்கா வான்வழித் தாக்குதல் மூலம் கொன்றது.. இந்த குட்ஸ் படைகளைக் கடந்த 2019ஆம் ஆண்டிலேயே அமெரிக்கா பயங்கரவாத அமைப்பாக அறிவித்திருந்தது. இப்போது அந்த அமைப்புடன் நெருங்கிய தொடர்பிலிருந்த ஒருவரே ஈரான் அதிபராகியுள்ளார்.

சர்வதேச நாடுகள்
ஈரான் அதிபராக இப்ராஹிம் ரைசி தேர்வு செய்யப்பட்டதற்கு சில நாடுகள் வாழ்த்து தெரிவித்துள்ளன. அதேநேரம் அதிதீவிர பழமைவாதியான அவரால் ஈரானின் வளர்ச்சி பாதிக்கப்படலாம் என்றும்கூட சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். குறிப்பாக அணு ஆயுத கொள்கையில் அவரை நம்ப முடியாது என்றும் வல்லரசு நாடுகள் உடனடியாக ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

அதிபர் தேர்தல்
ஈரான் தேர்தல் வரலாற்றிலேயே இந்தத் தேர்தலில் தான் மிகக் குறைவான வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த அதிபர் தேர்தலில் 70 சதவிகித வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில், இம்முறை 48. 8 சதவிகித வாக்குகளே பதிவாகின. இந்தத் தேர்தலில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக அதிகப்படியான மக்கள் கருதியதால் வாக்குப்பதிவு குறைந்துள்ளது.

தகுதி நீக்கம்
அதாவது ஈரான் அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்புவோரின் விருப்ப மனுக்களை 12 பேர் கொண்டு குழு பரிசீலனை செய்யும். மக்களிடம் அதிகம் வரவேற்பைப் பெற்ற வேட்பாளர்களை இந்த குழு தகுதி நீக்கம் செய்துவிட்டது. அதேபோல 40-75 வயதுடையவர்கள் மட்டுமே போட்டியிட வேண்டும் என்கிற புதிய விதி காரணமாகப் பலர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். சட்டப்படி ஈரான் தேர்தலில் பெண்கள் போட்டியிடத் தடை இல்லை என்றாலும் அனைத்து பெண்களும் இந்தத் தேர்தலில் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications