ரூ 99,584 கோடி கொடுத்து ‘வாட்ஸ் அப்’பை விலைக்கு வாங்கிய பேஸ்புக் நிறுவனம்
நியூ யார்க்: உடனுக்குடன் செய்திகளைப் பரிமாறிக் கொள்ள உதவும் ‘வாட்ஸ் அப்' எனப்படும் மொபைல் மெசேஜிங் சர்வீஸை 16 பில்லியன் டாலர் விலை கொடுத்து வாங்கியிருக்கிறது பேஸ்புக் நிறுவனம்.
விஞ்ஞான உலகின் வளர்ச்சியாக மொபைல் போன்கள் மூலம் உலகமே கைக்குள் சுருங்கி விட்டது. அதிலும் செல்போன்களில் இணைய வசதி பெற்றதன் மூலம் பல சமூக வலைதளங்கள் மூலம் உடனுக்குடன் செய்திகளை பெறவும், பரிமாறிக் கொள்ளவும் முடிகிறது.
எஸ்.எம்.எஸ் மூலம் செய்திகளைப் பரிமாறிக் கொண்டவர்கள், தற்போது வாட்ஸ் அப் மூலம் போட்டோக்களையும், செய்திகளையும் சுலபமாகப் பகிர்ந்து கொள்கிறார்கள். இந்நிலையில், தற்போது இந்த வாட்ஸ் அப்பை விலைக்கு வாங்கியுள்ளதாம் பேஸ்புக் நிறுவனம்.
இளைஞர்கள் சாய்ஸ்....
வாட்ஸ் அப் பயன்படுத்தி உலகின் எந்த மூலையில் உள்ள நபருக்கும் அரை நொடிக்குள் புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவற்றை எவ்வித செலவுமின்றி, அனுப்பி விடலாம். இதனால், இன்றைய இளைய தலைமுறையினரில் பெரும்பாலானோர் தங்களது செல்போன்களில் 'வாட்ஸ் அப்'பை பதிவிறக்கம் செய்து பயன் படுத்தி வருகின்றனர்.
40 கோடி மக்கள்....
இன்றைய நிலவரப்படி, உலகம் முழுவதும் சுமார் 40 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பேஸ்புக் வசமாகும் வாட்ஸ் அப்...
நாளுக்கு நாள் 'வாட்ஸ் அப்பைப் பயன் படுத்தி வருனோர் அதிகரித்து வரும் நிலையில், புதிய நட்புகளை உருவாக்கிக் கொள்ளவும், புதுப்பித்துக் கொள்ளவும் வசதி ஏற்படுத்தித் தரும் பேஸ்புக் அதனை வாங்க முடிவு செய்துள்ளது.
அம்மாடியோவ்....
இதற்கான விலையாக 16 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நிர்ணயிக்கப் பட்டுள்ளதாம். அதாகப்பட்டது இந்திய மதிப்பில் சுமார் 995,84 கோடி ரூபாய் ஆகும்.
ஒப்பந்தம் போட்டாச்சாம்...
இந்த தொகையில் 4 பில்லியன் டாலர்களை ரொக்கமாகவும், 12 பில்லியன் டாலர்களை பங்குகளாகவும் வழங்க ‘ஃபேஸ்புக்' நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளதாகவும், இதற்கான ஒப்பந்தம் நேற்று கையொப்பமாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இளைஞர்களைக் கவர....
இவ்வளவு விலை கொடுத்து வாட்ஸ் அப்பை பேஸ்புக் வாங்குவதற்குக் காரணம் அதனைப் பயன் படுத்தும் இளைஞர்களைக் கவரத் தான் எனச் சொல்லப் படுகிறது. இதன் மூலம் உலகிலேயே அதிக விலைக்கு விற்கப்பட்டது என்றப் பெருமையை வாட்ஸ் அப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.