தாய்லாந்து முன்னாள் பிரதமர் அரசியல் குற்றவாளியாக அறிவிப்பு: அரசியல் வாழ்க்கைக்கு 5 ஆண்டு தடை!
பாங்காங்: தாய்லாந்து முன்னாள் பிரதமர் ஷினவத்ராவை அரசியல் குற்றவாளியாக அந்த நாட்டு நாடாளுமன்றம் நேற்று பிரகடனம் செய்தது. இதனால் அவர் 5 ஆண்டுகாலம் அரசியலில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தாய்லாந்தின் முதல் பெண் பிரதமரான யிங்லக் ஷினவத்ரா ஆட்சிக் காலத்தில் அரிசிக்கு மானியம் வழங்கும் கவர்ச்சிகரமான திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தால் அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டதையடுத்து ஷினவத்ரா ஆட்சிக்கு எதிராக எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து ராணுவம் அவரது அரசைக் கவிழ்த்துவிட்டு ஆட்சியைக் கைப்பற்றியது. இந்த நிலையில் சர்ச்சைக்குரிய அரிசி மானிய திட்டத்தை மேற்பார்வையிட்ட யிங்லக் தனது அலட்சியத்தால் அரசுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியதாக அவர் மீது நாடாளுமன்றத்தில் இந்த மாதம் 9-ஆம் தேதி அரசியல் குற்ற விசாரணை நடைபெற்றது.
இதையடுத்து பெரும்பாலும் ராணுவத்தால் நியமிக்கப்பட்ட எம்.பி.க்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் இது தொடர்பான வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது.
இதில் யிங்லக் ஷினவத்ராவை அரசியல் குற்றவாளியாக அறிவிப்பதற்கு ஆதரவு தெரிவித்து பெரும்பாலான உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
இதனைத் தொடர்ந்து, யிங்லக் ஷினவத்ரா தாய்லாந்து அரசியலில் பங்கேற்க 5 ஆண்டுகளுக்குத் தடை விதிக்கப்படும்.
இதற்கிடையே ஷினவத்ரா மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக அரசு தலைமை வழக்குரைஞர் அறிவித்துள்ளார்.
அந்த வழக்கில் அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டால், அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க முடியும்.