உகாண்டாவில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு ஆயுள்: புதிய சட்டம் அமல்
கம்பாலா: உகாண்டாவில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு 14 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை விதிக்கும் புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது.
ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் ஓரினச் சேர்க்கை குற்றச் செயலாகும். ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கும் மசோதா கடந்த 2009ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் அந்த மசோதா நிறைவேற்றப்படாமல் இருந்து வந்தது.
இந்நிலையில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு அதிகபட்ச தண்டனையான ஆயுள் தண்டனை வழங்கும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து அந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளித்து அந்நாட்டு அதிபர் யொவேரி முசெவெனி நேற்று அதில் கையெழுத்திட்டார்.
இந்த புதிய சட்டத்தின்படி ஓரினச் சேர்க்கையாளர்கள் முதல் முறை சிக்கினால் 14 ஆண்டுகள் சிறையும், மறுபடியும் சிக்கினால் ஆயுள் தண்டனையும் கிடைக்கும்.
மேற்கத்திய நாடுகள் ஆப்பிரிக்காவில் ஓரினச் சேர்க்கையை பரப்புவதாக அதிபர் யொவேரி குற்றம் சாட்டியுள்ளார்.