இஸ்ரேல்-ஹமாஸ் 5 மணி நேர யுத்த நிறுத்தம்! பதற்றத்துடன் வெளியே வந்த பொதுமக்கள்!
காஸா: ஐக்கிய நாடுகள் சபையின் வேண்டுகோளை ஏற்று இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பும் 5 மணி நேர யுத்த நிறுத்தத்தை கடைபிடித்தன. இந்த யுத்த நிறுத்த நேரத்தில் பொதுமக்கள் உணவுப் பொருட்களை வாங்க வீடுகளை விட்டு பதற்றத்துடன் வெளியேறினர்.
பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேல் கடந்த 9 நாட்களாக வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. இத்தாக்குதலில் பாலஸ்தீனியர்கள் 226 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 50 பேர் குழந்தைகள்.
5 மணி நேர யுத்த நிறுத்தம்
இந்த நிலையில் மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு ஒருங்கிணைப்பாளர் ராபர்ட் செரி, மனிதாபிமான அடிப்படையில் சிறிது நேரம் தாக்குதலை நிறுத்திக் கொள்ளுமாறு இரு தரப்பிடம் கோரிக்கை விடுத்தார்.
மக்கள் வெளியே வந்தனர்
இதை இஸ்ரேலும் ஹமாஸ் அமைப்பும் ஏற்றுக் கொண்டன. இன்று காலை 10 மணி முதல் பகல் 3 மணி வரை இந்த யுத்த நிறுத்தம் கடைபிடிக்கப்பட்டது. இதனால் காஸா பகுதி மக்கள் சற்றே நிம்மதியுடன் வெளிவந்தனர்.
சந்தைகளில் கூட்டம்
யுத்தம் மீண்டும் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்பதால் சந்தைகளில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வாங்க பெரும் கூட்டம் அலைமோதியது. எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசை காணப்பட்டது.
இந்த நிலையில் தற்காலிக யுத்த நிறுத்தத்தின் போது ஒரு சில இடங்களில் இருதரப்பும் தாக்குதல் நடத்தியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
எகிப்தில் அமைதிப் பேச்சுவார்த்தை
மேலும் இஸ்ரேல்-ஹமாஸ் இடையே நிரந்த யுத்த நிறுத்தத்துக்கான பேச்சுவார்த்தையும் எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடைபெறுவதாக கூறப்படுகிறது.
நாளை முதல் யுத்த நிறுத்தம்
இருதரப்பும் இதை உறுதிப்படுத்தாத நிலையில் நாளை முதல் காஸா பகுதி மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தக் கூடும் என்றும் கூறப்படுகிறது.