செப்டம்பர் மாதத்தோடு இழுத்து மூடப்படும் ஆர்குட் வலைத்தளம்!
சான்பிரான்சிஸ்கோ: கூகுள் நிறுவனம் தனது ஆர்குட் சமூக வலைத்தளத்தை இழுத்து மூடிவிட முடிவு செய்துள்ளது. 2004ம் ஆண்டு துவக்கத்தில் ஆர்குட் என்ற பெயரில் சமூக வலைத்தளத்தை அறிமுகம் செய்தது கூகுள். அதே ஆண்டுதான், மற்றொரு சமூக வலைத்தளமான பேஸ்புக்கும் அறிமுகமானது.

பேஸ்புக் நம்பர்-1
கூகுளின் ஆர்குட்டைவிட பேஸ்புக் பல கூடுதல் வசதிகளை கொண்டிருந்ததால், இன்று உலகின் நம்பர்-1 சமூக வலைத்தளமாக பேஸ்புக் உயர்ந்துள்ளது. அதற்கு 1.28 பில்லியன் பயனாளர்கள் உள்ளனர்.

இந்தியா, பிரேசிலில் ஆர்குட் கிரேஸ்
ஆர்குட்டை பொறுத்தளவில் இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் கணிசமாக பயன்படுத்தப்பட்டாலும், உலகின் பிற நாடுகளில் அதன் பயன்பாடு சொற்பமே. ஆர்குட் பயனாளர்களில் இந்தியாவை சேர்ந்தவர்கள் 20 சதவீதம் பேரும், பிரேசிலை சேர்ந்தவர்கள் 50 சதவீதம்பேரும் உள்ளனர்.

இங்கும் வீழ்ச்சி..
2010ல் இந்தியாவில் பேஸ்புக் ஆர்குட்டை முந்தி சென்று முதலிடம் பிடித்தது. 2012ல் பிரேசிலிலும் இதே நிலையை ஆர்குட் எதிர்கொண்டது. அதே நேரம் கூகுளின் யூடூப், பிளாக்கர், கூகுள் பிளஸ் ஆகியவை மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

பயனாளர்கள் எண்ணிக்கை..?
எனவே ஆர்குட்டை மூடிவிட முடிவு செய்துள்ளது கூகுள். செப்டம்பர் 30ம்தேதியோடு ஆர்குட் இழுத்து மூடப்படுமாம். இதை கூகுள் அறிவித்துள்ளது. அதேநேரம், தற்போது ஆர்குட்டுக்கு எத்தனை பயனாளர்கள் உள்ளனர் என்ற தகவலை அளிக்க கூகுள் மறுத்துவிட்டது.

பயனாளர்கள் கவனத்துக்கு..
எனினும், ஏற்கனவே உள்ள பயனாளர்கள் தங்கள் தகவல்கள் மற்றும் தரவுகளை வரும் 2016ம் ஆண்டு செப்டம்பர்வரை பராமரிக்கவும், பாதுகாக்கவும் இயலும் என்று கூகுள் தெரிவித்துள்ளது.

இதுதான் வழிமுறை!
ஆர்குட்டில் போட்டோ உள்ளிட்ட பல தகவல்களை வைத்துள்ள பயனாளர்கள் அதை கூகுள் பிளஸ்சுக்கு மாற்றி சேகரித்து வைத்துக்கொள்ளுமாறு கூகுள் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், இதுபோல பைல்களை பரிமாற்றம் செய்ய 'கூகுள்டேக்அவுட்' சேவையை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications