பாக். ராணுவ விமான தளங்கள் மீது தாக்குதல் - 10 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இரண்டு ராணுவ விமானத் தளங்கள் மீது தாக்குதல் நடத்திய பத்து தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொலை செய்துள்ளனர்.
நேற்று பாகிஸ்தானில் சுதந்திர விழா விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. இந்நிலையில், நேற்றிரவு பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள சமுங்கிலி மற்றும் காலித் ஆகிய இரண்டு விமானப்படை தளங்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
சமுங்கிலி விமானப்படை தளத்திற்குள் தானியங்கி ஆயுதங்கள், கையெறி குண்டுகள் போன்ற அதிபயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த தீவிரவாதிகள் மீது அங்கிருந்த பாதுகாப்புப் படையினர் எதிர் தாக்குதல் நடத்தினர்.
இருதரப்பினரும் மாறி மாறித் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டதில்5 தீவிரவாதிகள் உயிரிழந்தனர். இத்தாக்குதல் சம்பவத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் காயம் ஏற்பட்டது. மேலும், தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட 5 தீவிரவாதிகளை பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல், காலித் ராணுவ விமானப்படைத் தளத்திற்குள் நுழைந்த 5 தீவிரவாதிகளையும் பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். ராணுவ தளத்தை தகர்க்க அவர்கள் வைத்திருந்த குண்டுகளை பாதுகாப்பு படையினர் கைப்பற்றி செயல் இழக்க செய்தனர்.
இந்த தாக்குதலுக்கு எந்த ஒரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆனால் தலீபான் தீவிரவாத இயக்கம் இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஏனெனில், கடந்த மாதம் ஜூன் மாதம் கராச்சியில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாகினர். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் 10 பேரும் கொல்லப்பட்டனர்.