உங்க பேரை ‘செவ்வாய்’க்கு அனுப்பிட்டீங்களா..?
நியூயார்க்: உங்களது பெயரை செவ்வாய் கிரகத்தில் எழுத ஆசையா? இதோ அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சிக் கழகமான நாசா அதற்கு ஒரு வாய்ப்பு ஏற்படுத்தித் தந்திருக்கிறது.
பூமிக்கு அடுத்து மனிதன் குடியேற வாய்ப்புள்ளதாக செவ்வாய் கருதப்படுகிறது. ஆனால் அதற்கான உறுதியான ஆதாரங்கள் இதுவரை நமக்குக் கிடைக்கவில்லை.
ஆனாலும், செவ்வாயில் மனிதர்களைக் குடியேற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு சர்வதேச அளவில் ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. செவ்வாயில் குடியேறுவதற்கு தற்போதே பெயர்ப் பதிவும் செய்யப்பட்டு வருகிறது.
95 ஆயிரம் பெயர் பதிவு...
ஆனால், இதிலிருந்து வேறுபட்டு செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் பெயர்களை எழுத விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது நாசா. ஏற்கனவே இதற்கு 95 ஆயிரம் பேர் தங்களது பெயரைப் பதிவு செய்துள்ளனர்.
விண்ணப்பம்...
இதற்கு நாம் செய்ய வேண்டியதெல்லாம், நாசாவின் இணையதளப் பக்கத்திற்கு சென்று ஓரியன்'ஸ் மார்ஸ் விசிட் என்ற பக்கத்தைப் பார்க்க வேண்டும். அதில் தரப்பட்டுள்ள விண்ணப்பத்தில் நமது விவரங்களை பதிவு செய்ய வேண்டும். (http://mars.nasa.gov/participate/send-your-name/orion-first-flight/)
டிஜிட்டல் போர்டிங் பாஸ்...
உடனடியாக டிஜிட்டல் போர்டிங் பாஸ் என்ற ஒன்று நமக்குக் கிடைக்கும். பிறகு, ‘வெற்றி உங்களது பெயர் ஓரியன் விமானத்தில் பறக்கப் போகிறது' என்ற தகவல் வரும்.
கடைசித் தேதி...
விருப்பமுள்ளவர்கள் தங்களது பெயரைப் பதிவு செய்து கொள்வதற்கு கடைசித் தேதி இம்மாதம் 31ம் தேதி என நாசா அறிவித்துள்ளது.
ஓரியன் விண்கலம்...
பின்னர் பதிவு செய்யப்பட்ட பெயர்கள் அனைத்தும் ஒரு மைக்ரோசிப்பில் ஏற்றப்பட்டு, டிசம்பர் 4ம் தேதி செவ்வாய் கிரகத்திற்குப் பயணப்பட உள்ள ஓரியன் விண்கலத்தில் அனுப்பி வைக்கப்படும்.
முதலில் பெயர்கள்... பின்னர் மனிதர்கள்
இதுகுறித்து ஓரியான் திட்ட மேலாளர் மார்க் கேயர் கூறுகையில், மனிதர்களை எதிர்காலத்தில் செவ்வாய் கிரகத்திற்கு அழைத்துச் செல்ல நாசா தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக தற்போது பெயர்களைக் கொண்டு செல்கிறோம் என்றார்.