ராணுவ தளத்தை குறி வைத்த ஹிஸ்புல்லா.. ஒரே நேரத்தில் அட்டாக் செய்த 30 ராக்கெட்கள்! இஸ்ரேலுக்கு பதிலடி
டெல் அவிவ்: சமீபத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா கமாண்டர் பலியான சம்பவம், மத்திய கிழக்கில் பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. இப்படி இருக்கையில், இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வடக்கு இஸ்ரேலில் உள்ள அந்நாட்டின் ராணுவ தளத்தை குறி வைத்து ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்தியிருக்கிறது.
கடந்த 2007ம் ஆண்டு முதல் பாலஸ்தீனத்தின் காசா பகுதி இஸ்ரேலிய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்த கட்டுப்பாடுகளை எதிர்த்து, ஹமாஸ் எனும் பாலஸ்தீன விடுதலை அமைப்பானது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதி, இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இதில் 1500 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இதுதான் தற்போது இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கான தொடக்கப்புள்ளி. ஹமாஸை அழிப்பதே முதன்மையான நோக்கம் என்று முழக்கமிட்டு இஸ்ரேல் இந்த போரை தொடங்கியது.

போரில் இதுவரை 39,000க்கும் அதிகமான காசா மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இது காசா மக்களின் மொத்த மக்கள் தொகையில் 1.7 சதவிகிதமாகும். அதேபோல 3.7% மக்கள் அதாவது 86,000 பேர் போரால் படுகாயமடைந்துள்ளனர். 23 லட்சம் மக்கள் போர் காரணமாக இடம் பெயர்ந்துள்ளனர். பசி, பட்டினியும், தொற்று நோயும் அவர்களை துரத்திக்கொண்டே இருக்கிறது. காசா பகுதி ஏறத்தாழ தரைமட்டமாகிவிட்டது.
இந்த போரில் ஹிஸ்புல்லா அமைப்பு, பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வந்தது. அதாவது பாலஸ்தீனத்திற்காக எப்படி அந்நாட்டின் ஹமாஸ் போராடி வருகிறதோ, அதுபோல லெபனானிலிருந்து இயங்கி வரும் அமைப்புதான் ஹிஸ்புல்லா. இது சுதந்திர பாலஸ்தீன கொள்கையை ஆதரித்து வருகிறது. எனவே ஹமாஸுடன் சேர்ந்து இஸ்ரேலுக்கு எதிராக செயல்பட்டு வந்தது.
இதற்கு பதிலடி கொடுக்க லெபனான் மீது இஸ்ரேல் திடீர் வான் வழித் தாக்குதலை நடத்த, இதில் ஹில்புல்லா அமைப்பின் கமாண்டர் ஃபுவாட் ஷுக்ர் சில நாட்களுக்கு முன்னர் பலியானார். அடுத்த நாள் ஈரான் நாட்டில் வைத்து, ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவை இஸ்ரேல் போட்டு தள்ளியது.
இந்த இரண்டு கொலைகளும் மத்திய கிழக்கில் பெரும் பதற்றத்தை உருவாக்கியிருக்கிறது. குறிப்பாக ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் பாதுகாப்பு படை (IDF) மீது கடும் கோபத்தில் இருக்கிறது. எனவே எப்போது வேண்டுமானாலும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என அமெரிக்கா எச்சரித்திருந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை வடக்கு இஸ்ரேலில் உள்ள அந்நாட்டின் ராணுவ தளத்தை குறிவைத்து ஹிஸ்புல்லா தாக்குதலை நடத்தியுள்ளது.

இது குறித்து இஸ்ரேலின் செய்தி ஊடகங்கள் கூறுகையில், “வடக்கு இஸ்ரேலின் கடற்கரை நகரமான நஹாரியாவிற்கு அருகிலுள்ள கப்ரி பகுதியை நோக்கி ஹிஸ்புல்லா அமைப்பு சுமார் 30 ஏவுகணைகளை ஏவியிருக்கிறது. இந்த பகுதியில் உள்ள ராணுவ தளம்தான் அவர்களின் இலக்கு. இந்த தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சில ராக்கெட்கள் திறந்தவெளி பகுதியில் விழுந்துள்ளன” என தெரிவித்திருக்கிறது.
இருப்பினும் இந்த தாக்குதலில் வடக்கு இஸ்ரேலில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் வசம் ராக்கெட்களை தாக்கி அழிக்கும் அயன் டோம் எனும் பாதுகாப்பு கவச வசதி இருக்கிறது. எனினும், கடந்த அக்.7ம் தேதி இதை மீறித்தான் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதலை நடத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications