ஜப்பானைப் புரட்டிப் போட்ட புயல் மழை- 1 லட்சம் பேர் வீடுகளின்றி தவிப்பு; நீடிக்கும் அபாயம்!
டோக்கியோ: ஜப்பானில் பெய்து வந்த கடும் மழையால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வருவதால் கிட்டதட்ட 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியேறும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ஜப்பானில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வந்தது. இதன் காரணமாக பல ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டோடுகிறது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவால் வீடு தரைமட்டமாகி மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார்.
மற்றொரு பெண் காரில் வெள்ளத்துடன் அடித்துச் செல்லப்பட்டு பலியானார். மழை தொடர்பான சம்பவங்களில் 27 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அதில் 8 பேரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 25 பேர் காணாமல் போய் உள்ளனர். அவர்களில் குழந்தைகளும் அடங்குவர்.
ஒரு லட்சம் பேர் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஒசாக்கி நகரில் சிபுய் நகரில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நெல் வயல்கள், வீடுகள் வெள்ளத்தில் மூழ்கிவிட்டன. ரப்பர் படகுகளில் மக்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். ஹெலிகாப்டர்களும் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றன.
பிரதமர் ஷின்ஜோ அபே அமைச்சரவையை கூட்டி வெள்ள நிலைமை குறித்தும், மீட்புப்பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்தியுள்ளார். அதன்பின்னர் அமைச்சரவை செயலாளர் யோஷிடே சுகா, நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர், "அரசு நிர்வாகம், போலீஸ், ராணுவம் அனைவரும் ஓரணியில் திரண்டு மீட்பு பணிகளை செய்து வருகிறார்கள். எங்கள் சக்தியையெல்லாம் பயன்படுத்தி மீட்பு பணியை செய்வோம்" என கூறினார். இதற்கிடையே நாட்டின் வட பகுதிகளில் இன்னும் மழை அபாயம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.