சாராய வியாபாரி விஜய் மல்லையா 400 கோடியை வெளிநாட்டில் பதுக்கியது எப்படி தெரியுமா?
விஜய் மல்லையா ஐடிபிஐ வங்கியில் பெற்ற ரூ.900 கோடி கடனில் பாதி பணத்தை வெளிநாட்டில் முதலீடு செய்தது எப்படி என்ற தகவல் வெளியாகியுள்ளது.
லண்டன்: பொதுத்துறை வங்கிகளில் ரூ. 9 ஆயிரம் கோடி அளவிற்கு கடன் வாங்கி விட்டு ஏமாற்றிய விஜய் மல்லையா, கடனைத் திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பி ஒடி விட்டார். இதுதொடர்பாக வழக்குகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே ஐடிபிஐ வங்கியில் பெற்ற ரூ.900 கோடி கடனில் பாதி பணத்தை வெளிநாட்டில் முதலீடு செய்தது எப்படி என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூரைச் சேர்ந்த பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா. இவர், கிங்பிஷர் ஏர்லைன்ஸ், கிங்பிஷர் மதுபான ஆலை உள்ளிட்டவற்றை நடத்தி வந்தார்.

9000 கோடி கடனாளி
இந்தியாவில் எஸ்பிஐ, பஞ்சாப் நேஷனல் வங்கி, விஜயா வங்கி, பேங்க் ஆப் பரோடா, கார்ப்பரேஷன் வங்கி பேங்க் ஆப் இந்தியா, யூனைடெட் இந்தியா உள்பட 17 வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிய விஜய் மல்லையா, கடனை திருப்பி செலுத்தாமல் லண்டன் பறந்து விட்டார். அங்கே ஹாயாக கிரிக்கெட் மேட்ச் பார்த்து வருகிறார். இவற்றில் ஐடிபிஐ வங்கியில் ரூ. 900 கோடி கடன் மோசடியில் ஈடுபட்ட வழக்கில், மல்லையா மீது, நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

ஏமாற்றிய மல்லையா
இந்த வழக்கு விசாரணைக்காக நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை, அவருக்கு மார்ச் 18, ஏப்ரல் 2, 9 என மூன்று முறை வாய்ப்பு அளித்தது. ஆனால் கடைசிவரை அவர் ஆஜராகவில்லை.
நிதி மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒருவருக்கு அதிகபட்சமாக 3 முறை மட்டுமே சம்மன் அனுப்ப முடியும் என்பதால், அடுத்த கட்ட நடவடிக்கையாக, மல்லையாவின் பாஸ்போர்ட்டை முடக்க அமலாக்கத்துறை முடிவு செய்தது. அதன்படி, பாஸ்போர்ட் சட்டப் பிரிவு 10 (ஏ)-கீழ் முடக்கி உத்தரவிட்டு உள்ளது.

900 கோடி கடன்
இந்நிலையில், விஜய் மல்லையா ஐடிபிஐ வங்கியில் பெற்ற ரூ.900 கோடி கடனில் பாதி பணத்தை வெளிநாட்டில் முதலீடு செய்து உள்ளார் என்று அமலாக்கப்பிரிவு தெரிவித்துள்ளது. ரூ. 430 கோடி அளவிலான பணம் விமான வாடகை, உதிரி பாகங்கள் இறக்குமதி, பராமரிப்பு சேவைகள் என்று போலியான காரணங்கள் கூறப்பட்டு இந்தியாவை விட்டு வெளியே கொண்டு செல்லப்பட்டு உள்ளது என்று அமலாக்கப்பிரிவு கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகின.

நாடு கடத்தும் வழக்கு
லண்டனில் வசித்து வரும் விஜய் மல்லையா இந்த வழக்கில் ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார். உடனடியாக மல்லையா, ஜாமீனில் வெளிவந்தார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பான வழக்கு, லண்டன் நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. இந்த வழக்கில், அவர் லண்டன் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார். அப்போது அவர், என் மீதான அனைத்துக் குற்றச்சாட்டையும் நான் மறுக்கிறேன். நான் எந்த நீதிமன்றத்தையும் ஏமாற்றவில்லை என்றார். இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை ஜூலை 6 ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது. அன்றைய தினமும் மல்லையா ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐடிபிஐ வங்கிக் கடன்
2009ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஐடிபிஐ வங்கி முதலில் குறுகிய கால கடனாக 150 கோடி ரூபாய் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு கொடுத்தது. இரண்டாவது முறையாக மல்லையாவிற்கு 750 கோடி ரூபாய் லோன் அளித்துள்ளது ஐடிபிஐ வங்கி.

வசூலிக்க முடியலையே
இதற்காக எந்த முறையான ஆவணங்களையும் பெற்றுக்கொள்ளாமலேயே மல்லையாவிற்கு கடன் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பணத்தில் 53 கோடியை பார்முலா ஒன் நிறுவனத்திலும், 70 கோடி ரூபாயை யுபி குரூப் நிறுவனத்திற்கும் விஜய் மல்லையா திருப்பி விட்டது தெரியவந்துள்ளது. இதனால்தான் மல்லையாவிடம் இருந்து கொடுத்த கடனை வசூலிக்க முடியாமல் தடுமாடுகிறது. நிபுணர்களின் ஆலோசனையை கேட்டு முறையாக சொத்து ஆவணங்களை பெற்றுக்கொண்டு மல்லையாவிற்கு லோன் வழங்கியிருந்தால் அந்த சொத்துக்களை ஏலம் விட்டாவது திரும்ப எடுத்துக்கொண்டிருக்கலாம். ஆனால் ஐடிபிஐ வங்கியில் ஆட்டையைப் போட்ட பணத்தை வெளிநாட்டில் முதலீடு செய்து விட்டு ஹாயாக லண்டனில் அமர்ந்து கிரிக்கெட் பார்த்துக்கொண்டிருக்கிறார் மல்லையா.












Click it and Unblock the Notifications