”வீடு இல்லை, நாடு இல்லை” கண்ணீர் விட்ட வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா.. ஆடியோ பதிவில் வேதனை
டாக்கா: வங்கதேசத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற மாணவர் போராட்டத்தின் போது தன்னையும் தனது சகோதரி ரெஹானாவையும் கொலை செய்ய சதி நடந்ததாகவும் தற்போது, நாடு இல்லாமல் வீடு இல்லாமல் பாதிக்கப்பட்டு இருப்பதாக வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா வெளியிட்ட ஆடியோ பதிவில் கூறியுள்ளார். இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள நிலையில், ஷேக் ஹசீனாவின் ஆடியோ பதிவு பேஸ்புக் பக்கத்தில் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான வங்கதேசத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் கடும் போராட்டம் மற்றும் வன்முறை ஏற்பட்டது. பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவிற்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டம் கட்டுப்பாட்டை மீறி சென்றது. அவர் பதவி விலக மறுத்த நிலையில் நடந்த போராட்டத்தில் 600 பேர் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்தனர்.

இந்தியாவில் தஞ்சம் அடைந்த ஷேக் ஹசீனா
இதனால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹைசீனா, நாட்டை விட்டு வெளியேறினார். இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஷேக் ஹசீனா தஞ்சம் அடைந்துள்ளார். அவரை திருப்பி அனுப்ப வேண்டும் என்று வங்கதேச அரசு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது. எனினும் வெளியுறவு அமைச்சகம் இதற்கு எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக பொது வெளியில் வராமல் இருக்கும் ஷேக் ஹசீனா குரல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். வங்கதேசத்தின் அவாமி லீக் கட்சி நேற்று இரவில் ஷேக் ஹசீனா பேஸ்புக் பக்கத்தில் இந்த ஆடியோ பதிவு வெளியிடப்பட்டுள்ளது. பங்களா மொழியில் அவர் வெளியிட்டு இருக்கும் அந்த குரல் பதிவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
வீடு, நாடு இல்லாமல் தவிக்கிறேன்
வெறும் 20-25 நிமிடங்களில் நாங்கள் மரணத்தில் இருந்து தப்பினோம். ஆகஸ்ட் 21 ஆம் தேதி கொலையில் இருந்து தப்பியதாக நான் உணர்கிறேன். அல்லாவின் கருணை இல்லை என்றால் இந்த முறை நான் தப்பித்து இருக்க மாட்டேன். கடந்த ஆண்டு நடந்த கொலை முயற்சி, முதல் முறையாக நடந்தது இல்லை. எனது வாழ்க்கையில் என்னைக் கொல்வதற்கு பல முறை சதி நடந்திருக்கிறது.
எனக்கு எதிராக உள்ளவர்கள் என்னை கொலை செய்ய எப்படி எல்லாம் திட்டமிட்டு இருந்தார்கள் என்பதை உலகம் அறியும். வீடு, நாடு இல்லாமல் நான் தவிக்கிறேன். அனைத்தும் தீக்கிரையாக்கபட்டது" என அழுதபடி கூறும் வகையில் இந்த ஆடியோ பதிவு உள்ளது.
சூறையாடிய வன்முறை கும்பல்
ஷேக் ஹசீனா கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி நாட்டை விட்டு வெளியேறிய நிலையில், அவரது பங்களா அடித்து நொறுக்கப்பட்டது. வீட்டில் இருந்த பொருட்களை வன்முறை கும்பல் சூறையாடியது. வீட்டில் இருந்த பல பொருட்களையும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அள்ளி சென்றனர். இந்தியாவில் தனது சகோதரி மற்றும் குடும்பத்தினருடன் தஞ்சம் அடைந்துள்ள நிலையில், கடந்த 6-ம் தேதி வங்கதேச நீதிமன்றம், ஷேக் ஹசீனாவுக்கு எதிராக இரண்டாவது முறையாக வாரண்ட் பிறப்பித்தது.












Click it and Unblock the Notifications