கொம்பால் முட்டியதில் பெண் பலி.. செம்மறியாட்டுக்கு வினோத தண்டனை.. ஆப்பிரிக்க நீதிமன்றம் உத்தரவு
தெற்கு சூடான்: ஆப்பிரிக்காவின் தெற்கு சூடானில் செம்மறியாடு கொம்பால் முட்டியதில் பெண் பலியானார். இதையடுத்து செம்மறி ஆட்டுக்கு வினோத தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.
தெற்கு சூடானை சேர்ந்தவர் அடியூ சாப்பிங் (வயது 45). இவர் அகுயெல் யோல் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தார். அங்கு டவ்னி மன்யாங் தால் என்பவரின் செம்மறியாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. பெரும்பாலான ஆடுகள் நல்ல திடகாத்திரமாகவும், கொம்புகள் வளைந்து கூர்மையாக இருக்கும்.
இந்நிலையில் வழக்கம்போல் அடியூ சாப்பிங், செம்மறியாட்டை மேய்ச்சலுக்கு அழைத்து செல்ல முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக அடியூ சாப்பிங்கை, செம்மறியாடு கொம்பால் பலமுறை முட்டியது. இதில் உடலில் எலும்புகள் முறிந்து அடியூ சாப்பிங் இறந்தார்.

இதுதொடர்பான வழக்கு தெற்கு சூடான் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அப்போது நீதிபதி, ‛‛செம்மறியாட்டின் உரிமையாளர் டவ்னி மன்யாங் தால் நிரபராதி. அவர் மீது எந்த குற்றமும் இல்லை. ஆனால் செம்மறியாடு பெண் ஒருவரின் உயிரை எடுத்துள்ளது. இதனால் செம்மறியாட்டுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. மேலும் அந்த பெண்ணின் குடும்பத்துக்கு 5 பசுமாடுகளை வழங்க செம்மறியாட்டின் உரிமையாளருக்கு உத்தரவிடுகிறேன்'' என கூறினார். இதையடுத்து செம்மறியாடு அங்குள்ள சிறையில் வைத்து பராமரிக்கப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications