பயங்கரவாதிகளுடன் ரகசிய தொடர்பு.. காஷ்மீரில் 2காவலர்கள் உட்பட 11 அரசு ஊழியர்கள் டிஸ்மிஸ்.. பரபர தகவல்
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் பணிபுரிந்து வந்த 11 அரசு ஊழியர்களுக்குப் பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருந்தால் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையேயான மோதல் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இன்றுகூட 3 பயங்கரவாதிகளைப் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.
காஷ்மீரில் பயங்கரவாதிகளை அழிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்த 11 காஷ்மீர் அரசு ஊழியர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஆசிரியர்கள்
அவர்களில் ஒருவர் பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கை குறித்து லஷ்கர்- இ- தய்பா அமைப்புக்குத் தொடர்ந்து தகவல் அளித்து வந்துள்ளனர். அதேபோல காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள், ஜமாத்-இஸ்லாமி (ஜீஐ) மற்றும் துக்தரன்-இ-மில்லத் (டிஎம்) ஆகிய அமைப்புகள் நடத்திய பிரிவினைவாத கூட்டங்களில் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது.
போலீஸ் அதிகாரிகள்
டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ள மற்ற எட்டு அரசு ஊழியர்களில் இரண்டு பேர் போலீஸ் கான்ஸ்டபிள்கள் ஆகும். அவர்களில் கான்ஸ்டபிள் அப்துல் ரஷீத் ஷிகன் என்பவர் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல்களையும் நடத்தியுள்ளார். அதேபோல தேடப்படும் பயங்கரவாதியான ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் நிறுவனர் சையத் சலாஹுதினன் இரண்டு மகன்களும் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பயங்கரவாதிகளுக்கு நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டது.
வீட்டில் தங்க வைத்தார்
நேரடியாகப் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த நாஸ் மம்மது அல்லாய் என்ற சுகாதாரத் துறை ஊழியரும் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர் தனது வீட்டிலேயே இரண்டு பயங்கரவாதிகளைத் தங்க வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டும் அவர் மீது முன் வைக்கப்படுகிறது.
மொத்தம் 11 பேர்
ஒட்டுமொத்தமாகக் கல்வித் துறையில் பணியாற்றிய 4 பேர், காவல் துறையில் 2 பேர், விவசாய துறை, மின் துறை, திறன் மேம்பாட்டுத்துறை, சுகாதாரத்துறை ஆகிய துறைகளில் தலா ஒருவர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அதில் மின்சார துறையில் பணிபுரிந்த நபர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இரண்டு பயங்கரவாதிகளுடன் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களுடன் சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.