போர்க்களத்தில் பூத்த பூ.. குண்டுகளுக்கு நடுவே மெட்ரோ சுரங்கத்தில் எதிரொலித்த குவா, குவா சத்தம்!
கீவ்: உக்ரைனில் தொடர்ந்து வெடிகுண்டுகள் வெடிக்கும் சத்தங்கள் கேட்கும் நிலையில் தலைநகர் கீவ் மெட்ரோ சுரங்கத்தில் தஞ்சம் அடைந்த கர்ப்பிணிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.
ரஷ்யாவின் போர் நடவடிக்கையால் உக்ரைன் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய ராணுவத்தின் தொடர் தாக்குதலால் அங்கு குண்டுமழை பொழிகிறது.
இதில் இருந்து தப்பித்து உயிர் பிழைக்க வேண்டி மக்கள் பிரதிநிதிகள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் பாதுகாப்பான இடங்களை நோக்கி நகர்கின்றனர். ஏராளமான மக்கள் மெட்ரோ ரெயில் சுரங்கங்களில் தஞ்சம் அடைந்துள்னளர். இந்நிலையில் மெட்ரோ சுரங்கத்தில் தங்கிய கர்ப்பிணிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. அதன் விபரம் வருமாறு:
ஆயுதம் ஏந்திய சிங்கப் பெண்கள்.. தலைநகரை காக்க வீரத்துடன் அணிவகுப்பு.. தீரமுடன் களமாடும் உக்ரைன்..!
சுரங்கத்தில் பிரசவம்
ரஷ்யாவின் போர் நடவடிக்கையால் 23 வயது நிரம்பிய கர்ப்பிணி, கீவ் நகரில் உள்ள மெட்ரோ சுரங்க பாதையில் பாதுகாப்பாக இருந்தார். நேற்று திடீரென்று அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அலறி துடித்தார். இதையடுத்து அங்கு இருந்த பெண்கள் அவருக்கு பிரசவம் பார்த்தனர். இரவு 8.30 மணிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.
பெயர் என்ன
இதையடுத்து அங்கிருந்தவர்கள் கர்ப்பிணி, குழந்தையை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பாதுகாப்பாக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு இருவரையும் டாக்டர்கள் பரிசோதித்தனர். தாயும், சேயும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த குழந்தைக்கு மியா என பெயரிடப்பட்டுள்ளது. போருக்கு நடுவே பிறந்த இந்த குழந்தையை உக்ரைனிய அற்புதம் என அவர்கள் கூறி வருகின்றனர்.
இன்னொருவருக்கு ஆண் குழந்தை
இதேபோல் இன்னொரு பெண்ணுக்கு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து அந்த பெண் மற்றும் அவரது குழந்தையின் படத்தை முறையான அனுமதியுடன் பிரசவம் பார்த்த டாக்டர் தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்து உருக்கமாக சில விஷயங்களை குறிப்பிட்டு இருந்தார்.
அழித்தொழிக்க முடியாது
அவரது பதிவில் ‛‛மனித இனத்தை அழித்தொழிக்க எத்தனை சர்வாதிகாரிகள் வந்தாலும் அது முடியாது. இறப்பு ஒருபக்கம் இருந்தாலும், பிறப்பு மற்றொரு பக்கம் நிகழும். இதுதான் இயற்கையின் விதி. இதை யாரால் மாற்ற முடியும்?'' என உருக்கமாக கூறியுள்ளார்.
உக்ரைன் தொடர்பாக ராணுவ தாக்குதல், சிரமப்படும் மக்கள் தொடர்பான படங்கள் அதிகமாக சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு வரும் நிலையில், பிறந்த 2 குழந்தைகளின் படங்களும் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. தாயும், சேயும் நலமாக இருக்க வேண்டும், போர் விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என பிரார்த்தனை செய்வதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.