ஜெனிவாவில் 'சிங்களர் குரலாக' ஒலித்த இந்திய பிரதிநிதியின் பேச்சு
ஜெனிவா: மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் ஒரு சிங்களர் போலஇந்திய பிரதிநிதி பேசியதை இலங்கை ஊடகங்கள் கொண்டாடி மகிழ்கின்றன.
ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இலங்கை மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கையும், ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பும் ஒரே நேரத்தில் விசாரணை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி அமெரிக்கா தீர்மானம் கொண்டுவந்தது.
47 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இந்த தீர்மானத்தை 23 நாடுகள் ஆதரித்தன.
ஆதரவு நாடுகள்
அர்ஜெண்டினா, ஆஸ்திரியா, பிரேசில், சிலி, கோஸ்டாரிக்கா, ஐவரி, செக் குடியரசு, எஸ்தோனியா, பிரான்ஸ் ஜெர்மனி, அயர்லாந்து, இத்தாலி, மாசிடோனியா, மோண்டிநீக்ரோ, பெரு, கொரியா, ருமேனியா, சியாரா லியோன், போட்ஸ்வானா, மெக்சிகோ, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகள் ஆதரவு அளித்தன.
எதிர்த்த பாக், சீனா
அமெரிக்காவின் தீர்மானத்தை அல்ஜீரியா, சீனா, காங்கோ, கியூபா, கென்யா, மாலத்தீவு, பாகிஸ்தான், ரஷ்யா, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், வெனிசுலா, வியட்நாம் ஆகியவை எதிர்த்தன.
நடுநிலை
இந்த தீர்மானத்தின் வாக்கெடுப்பில் எதியோப்பியா, இந்தியா, இந்தோனேசியா, ஜப்பான், கஜகஸ்தான், குவைத், தென்னாபிரிக்கா, நமீபியா, மொரோக்கோ, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகள் கலந்து கொள்ளவில்லை.
திலீப் சின்ஹா
முன்னதாக இந்த தீர்மானத்தின் மீது பேசிய இந்திய பிரதிநிதி திலீப் சின்ஹா, வழக்கம் போல இலங்கை பிரச்சனையில் மத்திய அரசு என்ன பேசுமோ அதைத்தான் பேசியிருக்கிறார். ஆனால் இப்போது இலங்கை மீது கூடுதல் கரிசனம்..
இலங்கை இறையாண்மை குறித்து கவலை
இப்படி ஒரு சர்வதேச அமைப்பு அதாவது ஐ.நா. அமைப்பு விசாரணை நடத்துவது என்பது இலங்கையின் இறையாண்மையை குலைக்கும் செயல் என்று பேசியிருக்கிறார் திலீப் சின்ஹா. அப்படியானால் திபெத்துக்கு, பாலஸ்தீனத்துக்கு, வங்கதேசத்துக்கு என இந்தியா பல தேசங்களில் தலையிட்டு ஆதரவு கொடுப்பது எப்படியாம் என்ற கேள்வி எழாமல் இல்லை..
சொத்தை வாதம்..
இந்திய காங்கிரஸ் அரசியல்வாதிகளைப் போல இன்னமும் செத்துப் போன 13வது அரசியல் சாசன திருத்தம் மூலம் அதிகாரப்பகிர்வு என்று கி.பி.1987ஆம் ஆண்டு காலத்திலேயே இந்தியா தங்கியிருக்கிறது என்பதைத்தான் நேற்றும் சின்ஹா பேசியிருந்தார்.
பொதுவாக்கெடுப்பு..
ஒட்டுமொத்த தமிழகமும், தமிழினமும் இப்போது கேட்டு நிற்பது தமிழீழத் தனியரசு அமைப்பதற்கான பொதுவாக்கெடுப்பு தேவை என்பதுதான்.. அதைவிட்டுவிட்டு இலங்கையின் இறையாண்மை, வெளிநாட்டுத் தலையீடு என்றெல்லாம் பேசியிருக்கிறார் திலீப் சின்ஹா
முதுகில் குத்திய துரோகம்..
இப்படியெல்லாம் பேசிய இந்தியா, அமெரிக்கா தீர்மானத்தை எதிர்த்து பாகிஸ்தான், சீனா போல வாக்களித்திருக்கலாம். நடுநிலைமை என்ற போர்வையில் நாடகமாடி, வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் தமிழர் நெஞ்சில் முதுகில் சராமரியாக குத்திக் கொலை செய்திருக்கிறது மத்திய அரசு என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது .
சர்வதேச விசாரணை..
என்னதான் இந்தியா தலைகீழாக நின்று தண்ணிகுடித்தாலும் இனி இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பான சர்வதேச விசாரணையை தடுக்க முடியாது. இதனால் இந்த சர்வதேச விசாரணை உடனே நடத்தப்பட வேண்டும் என்பதே தமிழர்களின் கோரிக்கையாக இருக்கிறது.