உசுரை கையில பிடிச்சுட்டு இருக்கோம்..ஈரானில் நாளுக்கு நாள் மோசமாகும் சூழல்! இந்தியர்களை மீட்க ஆக்ஷன்
டெல்லி: ஈரானில் நிலவி வரும் கடும் அரசியல் மற்றும் பொருளாதார பதற்றத்தால் போராட்டம் வலுத்து வரும் நிலையில், அங்கு வசித்து வரும் இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து கவலை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தொடர் கோரிக்கையை ஏற்று ஈரானில் உள்ள இந்தியர்களை தாயகம் அழைத்து வர சிறப்பு விமானம் இயக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த விமானம் இன்று (வெள்ளிக்கிழமை -ஜனவரி 16) இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரானில் தற்போது பணவீக்கம், நாணய மதிப்பிழப்பு, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பொருளாதார பிரச்சனைகள் உச்சத்தை எட்டியுள்ளன. இதனால் அரசுக்கு எதிராக மக்கள் நாடு முழுவதும் வீதிகளில் இறங்கி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
280க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்ற மோதல்களில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சில கள நிலவரங்களின் படி, உயிரிழப்பு எண்ணிக்கை 3,000-ஐ கடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஈரான் முழுவதும் அசாதாரண சூழல் நிலவி வருகிறது.

ஈரான் அரசியல் பதற்றம்
இந்த சூழ்நிலையில், ஈரானில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இதையடுத்து, தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் முக்கிய அறிவுறுத்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. மாணவர்கள், யாத்திரிகர்கள், வியாபாரிகள், சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட அனைத்து இந்தியர்களும் கிடைக்கும் வசதிகளை பயன்படுத்தி உடனடியாக ஈரானை விட்டு வெளியேற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஈரானில் இந்தியர்கள்
வர்த்தக விமானங்கள் உள்ளிட்ட எந்த வழி கிடைத்தாலும் அதனை பயன்படுத்தி இந்தியா திரும்புமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இந்தியர்கள் அனைவரும் தங்களின் பாஸ்போர்ட், அடையாள ஆவணங்கள் உள்ளிட்டவற்றை எப்போதும் கையில் வைத்திருக்க வேண்டும் என்றும், அவசர உதவி தேவைப்பட்டால் உடனடியாக இந்திய தூதரகத்தை தொடர்புகொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மீட்பு நடவடிக்கை
இதற்கிடையில், மத்திய அரசின் உத்தரவின் பேரில், ஈரானில் உள்ள இந்தியர்களை அழைத்து வர சிறப்பு விமான சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, அங்குள்ள இந்திய மாணவர்களை பாதுகாப்பாக தாயகம் அழைத்து வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பதற்றமான சூழல் மற்றும் போக்குவரத்து கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.
ஈரான் சிறப்பு விமானம்
ஈரானில் தற்போது மாணவர்கள் உள்பட 10,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இருப்பினும், இணைய சேவை முடக்கம் மற்றும் தொலைத்தொடர்பு தடைகள் காரணமாக, இந்தியர்களை தொடர்புகொண்டு அவர்களை ஒருங்கிணைப்பதில் சவால்கள் இருப்பதாகவும் தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஈரானில் நிலவி வரும் நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என்பதால், இந்தியர்களை பாதுகாப்பாக மீட்டு வரும் நடவடிக்கைகளை இந்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications