சுட்டுக்கொல்லப்பட்ட இந்திய மாணவர்.. விரைவில் விசாரணை நடத்தப்படும் - ரஷ்ய தூதர் தகவல்
மாஸ்கோ: உக்ரைனில் ரஷ்ய ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட மாணவரின் மரணம் குறித்து விசாரிக்கப்படும் என ரஷ்ய தூதர் தெரிவித்துள்ளார்.
Recommended Video
உக்ரைன் மீது ரஷ்யா கடுமையான போர் தாக்குதல் நடந்தி வருகிறது. ரஷ்யாவின் தாக்குதல் தினம் தினம் அதிகரித்து வருகிறது. இருநாட்டு தரப்பிலும் அதிகளவில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
உக்ரைனில் போர் நடந்து வருவதால், அங்கு மருத்துவம் படிக்க சென்ற ஆயிரக்கணக்கான மாணவர்கள் சிக்கித் தவித்தார்கள். அவர்களை மத்திய அரசு மீட்டு வருகிறது.

இந்திய மாணவர்கள்
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்த நிலையில், அங்குள்ள இந்தியர்களை வெளியேற்றும் பணியில் இந்திய அரசு இறங்கியது. கணக்கெடுப்பில் உக்ரைனில் சுமார் 20 ஆயிரம் இந்திய மாணவர்கள் படித்து வருவது தெரிய வந்தது. அதில் பெரும்பாலானோர் மருத்துவம் படித்து வருகிறார்கள். ஆபரேஷன் கங்கா என்ற பெயரில் இந்திய மாணவர்களை மீட்டு வருகிறது மத்திய அரசு.

சுட்டுக்கொலை
உக்ரைனில் ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பல இந்தியர்கள் உக்ரைனை விட்டு வெளியேறிவிட்டார்கள். ஆனால் ரஷ்ய எல்லை அருகே இருக்கும் நகரங்களில் இருந்து பலர் வெளியேறாமல் இருக்கிறார்கள். இந்நிலையில், இந்திய மாணவர் நவீன் கார்கிவ் நகரில் ரஷ்ய ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார். மளிகை பொருள்களை வாங்குவதற்காக ஒரு கடை வாசலில் நின்றிருந்த போது அவர் மீது துப்பாக்கிச் சூட்டை ரஷ்ய ராணுவம் நடத்தியதாக இந்திய மாணவருடைய நண்பர் தெரிவித்துள்ளார்.

இந்தியா
இந்திய மாணவர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு இந்தியா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. அதோடு, மாணவரின் தந்தையிடம் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார். மாணவரின் இறப்பு குறித்து ரஷ்யா மற்றும் உக்ரைனை இந்தியா கேள்வி எழுப்பியுள்ளது. மாணவரின் உடல் கார்கிவ் நகரில் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும், அதுகுறித்து இந்திய தூதரகத்தை நாடியிருப்பதாகவும் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

ரஷ்ய தூதர்
இந்நிலையில், உக்ரைனில் சுட்டுக்கொல்லப்பட்ட இந்திய மாணவர் நவீன் மரணத்துக்கு ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்திய மாணவர் நவீன் மரணம் குறித்து விசாரிக்கப்படும் என்றும், இந்தியர்களை ரஷ்ய எல்லை வழியாக வெளியேற்ற அனுமதிக்க இந்தியா கோரிக்கை வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதோடு, ஐநா கவுன்சில் ரஷியாவுக்கு எதிரான வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்காமல் புறக்கணித்தற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். எந்த பொருளாதார தடையும் எதுவும் செய்ய முடியாது'' என்றும் தெரிவித்துள்ளார். - ரஷ்ய தூதர்












Click it and Unblock the Notifications