உக்ரைனில் உள்ள இந்தியர்களே.. பாதுகாப்பான இடங்களில் இருக்கவும்.. இந்திய தூதரகம் அவசர அறிவிப்பு
கிவ்: ‛‛உக்ரைன் நிலை குறித்து இந்தியாவிடம் எடுத்து கூறப்பட்டுள்ளது. மீட்புக்கான மாற்று ஏற்பாடு விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் இந்தியர்களே பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுங்கள்'' என உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. உக்ரைன் தலைநகர் கிவ் உள்ளிட்ட நகரங்களில் குண்டுமழை பொழிந்து வரும் ரஷ்யாவின் செயலால் அங்கு உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. சுமார் 50க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.க்ஷ
இதனால் உயிர் பயத்தில் பொதுமக்கள் மெட்ரோ நிலையங்கள்,சுரங்க பாதைகளில் பதுங்கி வருகின்றனர். இந்தியா உள்பட அனைத்து நாடுகளும் தங்களது மாணவர்கள், மக்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் உக்ரைன் நாட்டில் விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

ஆலோசனை
இந்நிலையில் தான் டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் அவசர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. உக்ரைனில் உள்ள இந்தியர்கள், குறிப்பாக மாணவர்களை உரிய பாதுகாப்புடன் உடனே மீட்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. உக்ரைனில் உள்ள இந்தியர்களை ஒருங்கிணைத்து மீட்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இதற்கிடையே போர் நடவடிக்கையால் இந்தியர்களை மீட்க டெல்லியில் இருந்து உக்ரைன் புறப்பட்ட ஏர் இந்திய விமானம் பாதியிலேயே திரும்பியது.

தூதரகம் அறிவிப்பு
இந்நிலையில் உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் சார்பில் இந்தியர்களுக்கு அவசர அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: உக்ரைனில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. பதற்றமான இந்த சூழலில் விமானம், ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளன. சாலைகள் நெரிசலாக காணப்படுகின்றன. இதனால் இந்தியர்கள் அனைவரும் இந்த சூழ்நிலையில் அமைதியாகவும், அதே நேரத்தில் துணிவுடன் எதிர்கொள்ள வேண்டும்.

பாதுகாப்பான இடங்களுக்கு
உக்ரைன் தலைநகர் கிவியில் தொடர்ச்சியாக தூதரகம் செயல்படும். அனைவரும் வீடுகளிலேயே பத்திரமாக இருக்க வேண்டும். வெளி இடங்களில் இருப்பவர்கள் உடனே வீடு திரும்ப வேண்டும். அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுங்கள். கிவியில் இருப்பவர்கள் நண்பர்கள், உடன் பணிசெய்வோர், பல்கலைக்கழக நிர்வாகிகளுடன் தொடர்பில் இருக்க வேண்டும்.

மாற்று ஏற்பாடு
இங்குள்ள நிலையை இந்தியாவிடம் எடுத்து கூறி உதவி கோரப்பட்டுள்ளது. விரைவில் மாற்று ஏற்பாடு செய்யப்படும். அவசர உதவிக்கு தூதரக அவசர எண்களை தொடர்பு கொள்ளலாம். இன்ஸ்டாகிராம், பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தொடர்ந்து அறிவிப்புகள் வெளியிடப்படுகிறது. இந்த பக்கங்களை பின்பற்ற வேண்டும்'' என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications