குழந்தைகளை பலாத்காரம் செய்தால் ஆண்மை நீக்கம்- மரண தண்டனை: இந்தோனேசியாவில் புதிய சட்டம்
ஜகர்த்தா: இந்தோனேசியாவில் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்யும் கொடூர காமுகன்களுக்கு வேதிப்பொருட்கள் மூலம் ஆண்மைத் தன்மையை நீக்குவது மற்றும் மரண தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகள் வழங்கும் சட்டத்துக்கு அந்நாட்டின் அதிபர் ஜோகோ ஒப்புதல் தெரிவித்துள்ளார்.
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் கடந்த மாதம், 14 வயது சிறுமியை 7 பேர் கூட்டாக சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்தனர். அந்த குற்றவாளிகள் அனைவருக்கும் பத்து ஆண்டுகாலம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.
இதையடுத்து குழந்தைகளை பலத்காரம் செய்யும் கொடூரர்களுக்கு அதிகமான தண்டனை வழங்குவது குறித்து அந்நாட்டு அதிபர் ஜோகோ புதிய சட்டம் ஒன்றை பிறப்பித்துள்ளார். இந்த சட்டத்தின் மூலம் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு வேதிப்பொருட்கள் மூலம் ஆண்மைத் தன்மையை நீக்குவது மற்றும் மரண தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகள் வழங்கப்படும். இது தொடர்பான வழக்குகளில் பரோலில் செல்பவர்கள் எலக்ட்ரானிக் கண்காணிப்பு சாதனத்தை அணிந்து கொண்டு தான் செல்ல முடியும்.
இது குறித்து அதிபர் ஜோகோ கூறுகையில், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து கொண்டிருப்பது அவர்களின் முன்னேற்றத்தை பாதிக்கும் வகையில் உள்ளன. மேலும், பொது அமைதியை பாதிக்கும் வகையில் உள்ளது. எனவே தான் நாங்கள் குற்றவாளிகளுக்கு அதிகப்படியான தண்டனை வழங்குவது என தீர்மானித்துள்ளோம்.
மேலும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் ரீதியிலான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டு தண்டனை என்பதை மாற்றி 20 ஆண்டுகால சிறை தண்டனை வழங்குவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.