இந்தியாவில் 18,000 பேரை கொன்றது.. 2004ல் இந்தோனேஷியாவில் ஏற்பட்ட பூகம்பம்-சுனாமியை மறக்க முடியுமா?
ஜகார்த்தா: இந்தோனேஷியாவின் பலு பகுதியில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியால் 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆனால், 2004ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் அதனால் ஏற்பட்ட சுனாமியை 90ஸ் கிட்ஸ் மறந்திருக்கவே முடியாது. அவர்கள் வாழ்க்கையில் பார்த்த மிகப்பெரிய பேரழிவு அதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
என்ன நடந்தது, ஏன் 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி வரலாற்றின் கருப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது என்பதை அறிய ஒரு சிறு பிளாஷ்பேக்.
[இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும்.. பீதியை கிளப்பும் கோவை காலநிலை ஆய்வு மையம் தகவல்!]

மிகப்பெரிய நிலநடுக்கம்
2004ம் ஆண்டு, வடக்கு இந்தோனேஷியாவின், சுமத்ரா தீவில் ஏற்பட்ட 9.1 ரிக்டர் என்ற அளவிலான மிகப்பெரிய நிலநடுக்கத்தால், இந்திய பெருங்கடல் பகுதிகளில் சுனாமி ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 10 நிமிடங்கள் நீடித்தது. உலகம் கண்ட மிகப்பெரிய நிலநடுக்கங்களில் 3வது பெரிய பூகம்பம் அது என்று அறிவிக்கப்பட்டது.

பாக்சிங் டே சுனாமி
இந்தியா உட்பட 13 நாடுகளில் சுனாமி தாக்கம் இருந்தது. இதனால் இந்தோனேஷியாவில் 120,000 பேர் உட்பட சுனாமி மற்றும் பூகம்ப தாக்கத்தால் 226,000 பேர் கொல்லப்பட்டனர். உலகம் கண்ட மிகப்பெரிய பேரழிவுகளில் ஒன்றாக இது கூறப்படுகிறது. டிசம்பர் 26ம் தேதி இந்த இயற்கை பேரிடர் நடந்ததால், இதை பாக்சிங் டே சுனாமி என்று அழைக்கப்பட்டது. இதன் தாக்கம் இந்தோனேஷியா முதல் ஆப்பிரிக்கா வரையில் நீண்டது.

இந்தியாவில் பாதிப்பு
சுனாமி தாக்கம் தமிழகத்தில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை இருந்தது. இந்தியாவில் 18,000 பேர் கொல்லப்பட்டனர். இருப்பினும், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் அருகே மட்டும் கடல் பின்னோக்கி சென்றது விஞ்ஞானிகளுக்கே இதுவரை, புரியாத புதிராக உள்ளது. இலங்கையில், 35,000, தாய்லாந்தில் 8,000 பேர் கொல்லப்பட்டனர். ஆப்பிரிக்காவில் சில நூறு பேர் பலியாகினர். சுமத்ராவை தாக்கிய பூகம்பத்தின் தாக்கம் என்பது, ஹிரோசிமாவில் வீசப்பட்ட அணுகுண்டை விட 1,500 மடங்கு அதிக சக்தி வாய்ந்தது என்று கணிக்கப்பட்டது.

14 வருடங்களுக்கு பிறகு
இதேபோல, 2005ம் ஆண்டு பலு பகுதியில் 6.2 ரிக்டரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், ஒருவர் கொல்லப்பட்டார். இதன்பிறகு அவ்வப்போது இந்தோனேஷியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டாலும் சுனாமி தாக்கவில்லை. ஆனால், நேற்று பலு பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 7.5 அளவுக்கு பதிவான நிலநடுக்கத்தால், சுனாமி தாக்கி 30 பேர் பலியாகியுள்ளனர்.












Click it and Unblock the Notifications