இந்தோனேசியா: அதிகாலையில் மக்களை அலற வைத்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின் வாபஸ்!
ஜகார்தா : இந்தோனேசியாவில் இன்று அதிகாலையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா தீவில் அதிகாலையில் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.3ஆக பதிவானது. இதனையடுத்து, இந்தோனேசியா நாட்டில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதனால் மக்கள் மத்தியில் பயங்கரமான பீதி ஏற்பட்டது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு உள்ளூர் அதிகாரிகள் எச்சரித்து இருந்தனர். அதன்படி மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து உடனடியாக வெளியேறினர். எனினும், இரண்டு மணி நேரத்தில் சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளது.

பூமியின் வெவ்வேறு அடுக்குகள் அடிக்கடி சந்திக்கும் புவியியல் அமைவிடம் காரணமாக அடிக்கடி நிலநடுக்கம், சுனாமி உள்ளிட்ட பேரிடர்கள் ஏற்படும் இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் இன்று அதிகாலையில் பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் சுமத்ராவின் மேற்கு கடற்கரையில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நேற்று இந்தோனேசியாவில் இரண்டு முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் கெபுலாவான் பதுவில் நேற்று அதிகாலை நில நடுக்கம் உண்டானது. இது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவானது.
அதன் பின் சில மணி நேரங்களுக்கு பிறகு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவானது. இதனால் மக்கள் பெரும் பீதி அடைந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலையிலும் இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுப் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதேபோல, மலேசிய தலைநகர் கோலாலம்பூர் அருகே நள்ளிரவு 1.30 மணிக்கு பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.7ஆகப் பதிவாகியுள்ளது. வங்கதேச தலைநகர் டாக்கா அருகே மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. டாக்காவிலிருந்து 21 கி.மீ தொலைவில் நள்ளிரவு 1.45 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4ஆகப் பதிவாகி உள்ளது.












Click it and Unblock the Notifications