உக்ரைனில் உயிரிழக்கும் அப்பாவிகள்... 3 குழந்தைகள் உள்பட 198 பேர், போரில் பலி
கீவ்: ரஷ்யாவின் போர் நடவடிக்கையால் உக்ரைனில் அப்பாவிகள் உயிரிழந்து வருகின்றனர். இதுவரை 3 குழந்தைகள் உள்ப ட198 பேர் பலியானதாக உக்ரைன் அரசு கூறியுள்ளது.
உக்ரைன் நேட்டோ அமைப்பில் சேர முயற்சிகள் மேற்கொண்டது. இதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் உக்ரைனை மிரட்டும் வகையில் ரஷ்யா எல்லையில் படைகளை குவித்து வந்தது.
இதனால் இருநாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் உருவானது. இந்நிலையில் ரஷ்ய அதிபர் விலாடிமிர் புதின் உத்தரவில் ரஷ்ய படை வீரர்கள் உக்ரைனில் ராணுவ நடவடிக்கைகளை துவங்கினர்.

3வது நாள் தாக்குதல்
இதன்மூலம் நேற்று முன்தினம் முதல் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க துவங்கியது. உக்ரைன் தலைநகர் கீவ், கார்னவ் உள்பட பல்வேறு நகரங்களை ரஷ்ய படைகள் தாக்கி வருகின்றன. 3வது நாளான இன்று ரஷ்யாவின் வான்வெளி தாக்குதலால் அடுக்குமாடி கட்டங்கள் சேதமடைந்துள்ளன. பாலங்கள் உருக்குலைந்துள்ளன. மக்கள் வெளியில் நடமாடுவதை தவிர்த்து பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ளனர்.

தலைநகரை கைப்பற்ற..
கீவ் நகரை கைப்பற்றி உக்ரைனை கட்டுப்பாட்டில் கொண்டு வர செயல்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் ராணுவ வீரர்கள், பொதுமக்கள் தொடர்ந்து ஆயுதம் ஏந்தி போராடி வருகின்றனர். ஒருபோதும் உக்ரைன் நாட்டை விட்டு கொடுக்கமாட்டோம் என அதன் அதிபர் விலாடிமிர் ஜெலன்ஸ்கி சூளுரைத்துள்ளார்.

கீவ் கட்டுப்பாடு யாரிடம்
சிறிது நேரத்துக்கு முன்பு அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் ‛‛ராணுவத்தை சரணடைய கூறியதாக வதந்திகள் பரவுகிறது. நான் இங்கு தான் இருப்பேன். எங்கும் ஓடி போகமாட்டேன். எங்கள் குழந்தைகளின் எதிர்காலத்துக்காக தொடர்ந்து போராடுவோம். தலைநகர் கீவ் எங்களின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது'' என்றார்.

198 பேர் பலி
இந்நிலையில் ரஷ்யாவின் போர் நடவடிக்கையால் உக்ரைனில் 3 குழந்தைகள் உள்பட 198 பேர் பலியாகி உள்ளதாக அந்த நாட்டு சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. இதுகுறித்து உக்ரைன் சுகாதார அமைச்சர் விக்டர் லியாஷ்கோ தனது பேஸ்புக் பக்கத்தில், ‛‛போர் தொடர்பாக கையில் உள்ள புள்ளி விபரப்படி 3 குழந்தைகள் உள்பட 198 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 33 குழந்தைகள் உள்பட 1,115 பேர் காயமடைந்துள்ளனர். இது துரதிர்ஷ்டவசமானது'' என கூறியுள்ளாளர். முன்னதாக நேற்று உக்ரைன் தரப்பில், போரில் ரஷ்யாவின் 1000 ராணுவ வீரர்கள் இறந்துள்ளனர் என கூறப்பட்டு இருந்தது.

செக்குடியரசு உதவி
இதற்கிடையே உக்ரைனுக்கு ஆயுதங்கள் கொடுத்து உதவ மத்திய ஐரோப்பிய நாடான செக்குடியரசு முன்வந்துள்ளது. இதுகுறித்து அந்த நாட்டின் ராணுவ அமைச்சர் ஜனா செர்னோசோவா கூறியுள்ளார். அவர் கூறுகையில், ‛‛ரஷ்யாவின் போரில் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு நன்கொடையாக ரூ.7.6 மில்லியன் யூரோ மதிப்பில் பல்வேறு வகையான துப்பாக்கிகள், தோட்டாக்கள் வழங்கப்பட உள்ளது'' என கூறப்பட்டுள்ளது. இந்தநாடு ஏற்கனவே ஜனவரியி் ரூ.1.5 மில்லியன் யூரோ மதிப்பிலான 4 ஆயிரம் பீரங்கி குண்டுகள் வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications