இணையவழியில் சர்வதேச பெண்கள் மாநாடு...18 நாடுகளை சேர்ந்த பெண்கள் பங்கேற்று அசத்தல்
டொரன்டோ : ஐக்கிய நாடுகள் சபை அங்கீகாரம் பெற்ற அலையன்ஸ் கிரியேட்டிவ் கம்யூனிட்டிவ் புரஜெக்ட் மற்றும் கல்லிடைக்குறிச்சி தேசிய கல்வி அறக்கட்டளை இணைந்து நடத்திய சர்வதேச பெண்கள் மாநாடு, மார்ச் 6-ம் தேதி கனடிய நேரம் காலை 8- மணிக்கு ஆரம்பமாகி 11- மணிக்கு நிறைவடைந்தது.
மிகவும் நேர்த்தியான முறையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் பதினெட்டு நாடுகளை சேர்ந்த, பல் துறை சார்ந்த பெண்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த நவீன காலத்தில் பெண்களை அரசியல் மற்றும் தலைமைத்துவத்தில் ஈடுபட ஊக்குவித்தல் என்னும் பொருள்படும் தலைப்பில், இன்றைய 21-ம் நூற்றாண்டிலும் பெண்கள் எதிர்நோக்கும் பல பிரச்சனைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
கல்வி உரிமையை மறுக்கும் நாடுகள்
குழு விவாதத்தில்,குறிப்பாக யுத்தம் காரணமாக சிரியா, காஷ்மீர், இலங்கை மற்றும் மியான்மர் போன்ற நாடுகளில் லட்சக்கணக்கான பெண்கள் விதவைகள் ஆக்கப்பட்டுள்ளதுடன் அவர்களே பாதிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள். அத்துடன் இன்னும் பல நாடுகளில் அடிப்படை கல்வி உரிமை கூட பெண்களுக்கு மறுக்கப்படுகின்றதுடன், பல சித்திரவதைகளுக்கு ஆளாகின்ற நிலைமை தொடர்பிலும் கருத்துக்கள் பரிமாறப்பட்டது.
பெண்களுக்கான உரிமை
சர்வதேச ரீதியாக பெண்கள் ஒன்றிணைந்து பலமான அமைப்பாக பெண்களுக்கான உரிமை தொடர்பில் கவனம் செலுத்துவதுடன் உலகளவில் பிரச்சாரம் ஒன்றை மேற்கொள்ளுவது காலத்தின் தேவையாக இருக்கின்றது என கருத்துக்கள் முன் வைக்கப்பட்டன.
சவால்களை சந்திக்கும் பெண்கள்
அதேவேளை பெண்கள் பொதுத்துறையில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது எனினும் அவர்கள் பல சவால்களுக்கு முகம் கொடுத்தே முன்னுக்கு வர வேண்டியிருக்கின்றது. அவர்கள் மனரீதியான தாக்கங்கள் மற்றும் வெளியில் எதிர்நோக்கும் அவலங்களை மிக உறுதியுடன் கடந்து வரும் பட்சத்தில் பல முன்னேற்றங்களை காண முடியும்.
பெண்களின் பிரச்சனைகள் பற்றி விவாதம்
அத்துடன் மற்ற பெண்களையும் வழி நடத்த முடிவதுடன் தொடர்ந்து பல கருத்தரங்குகள் நடத்துவதன் மூலமாக விழிப்புணர்வை ஏற்படுத்தி , பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் விதவை பெண்கள் வாழ்வில் மாற்றம் ஏற்பட உலகளாவிய ரீதியில் பெண்கள் பாடுபட வேண்டும் என்ற ஆலோசனையுடன் சர்வதேச பெண்கள் மாநாடு நிறைவடைந்தது.