ஐ.எஸ்.ஐ.எஸ்க்கு எதிரான சர்வதேச அளவில் கூட்டுத் தாக்குதல் திட்டம்- ஈரான் எதிர்ப்பு
பாரீஸ்: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக உலகம் தழுவிய கூட்டுத் தாக்குதல் திட்டத்திற்கு ஈரான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஈராக், சிரியாவை ஆட்டிப்படைத்து வரும் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா தலைமையில் தாக்குதல் திட்டத்தை செயல்படுத்த 12 நாடுகள் இதுவரை ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த நாடுகள், தீவிரவாதிகளுக்கு எதிரான ஈராக் படையினரின் தாக்குதலுக்கு ஆதரவாக நிற்கப் போகின்றன. ஆனால் இதற்கு ஈரான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்த திட்டம் பிரச்சினையைத் தீர்க்க உதவாது என்று அது கருத்து தெரிவித்துள்ளது. அதேசமயம் இந்த தீவிரவாதத்திற்கு எதிரான திட்டங்களில் ஈரானைச் சேர்க்க மாட்டோம் என்று அமெரிக்கா அதிரடியாக கூறி விட்டது. இதை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி தெளிவுபடுத்தியுள்ளார். இதுதொடர்பாக பாரீஸில் தொடங்கியுள்ள கூட்டு நாடுகளின் கூட்டத்திற்கும் ஈரானை அழைக்கவில்லை அமெரிக்கா.
எதிர்ப்பு...
சன்னி பிரிவு தீவிரவாதிகளான ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை சமாளித்து அடக்குவதில் ஷியா நாடான ஈரான் சற்று உதவ முடியும் என்பது பிரான்ஸ் மற்றும் ஈராக்கின் எண்ணம். ஆனால் அரபு நாடுகளான சவூதி அரேபியா போன்றவை இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதனால்தான் ஈரானை கூட்டு சேர்க்க அமெரிக்காவும் விரும்பவி்ல்லை.
லாஜிக் இடிக்கும்...
மேலும் ஈரானுடன் அமெரிக்காவுக்கே பல பிரச்சினைகள் உள்ள நிலையில் ஈரானையும் தன்னுடன் சேர்ப்பதில் லாஜிக் இருக்காது என்பது அமெரிக்காவின் கருத்தாகும். இதனால்தான் பாரீஸ் கூட்டத்திற்குக் கூட ஈரானை அது அழைக்கவில்லை.
வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம்...
இந்த நிலையில்தான் அமெரிக்காவின் கூட்டுத் தாக்குதல் திட்டத்திற்கு ஈரான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆசிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டம்தான் தற்போது பாரீஸில் நடைபெறுகிறது. இதில் மத்திய கிழக்கு மற்றும் மேற்குலக நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும் கலந்து கொள்கிறார்கள். ஐஎஸ்ஐஎஸ்ஸ்ஸுக்கு எதிரான திட்டங்கள், உத்திகள் குறித்து இதில் விரிவாக ஆலோசிக்கப்படவுள்ளது.
முழு ஆதரவு...
ஈராக் அரசின் தாக்குதல் திட்டங்களுக்கு முழு அளவில் ஆதரவு தெரிவித்து அவர்களுக்குத் தேவையான விமானத் தாக்குதல் உதவி, ஆயுத பலம், நிதியுதவி உள்ளிட்டவற்றைக் கொடுத்து தீவிரவாதிகளை ஒடுக்குவதே அமெரிக்காவின் திட்டமாகும். இதில் நேரடியாக அமெரிக்கா தீவிரவாதிகளுடன் மோதாது என்று ஏற்கனவே அதிபர் ஒபாமா தெளிவுபடுத்தியுள்ளார்.
விமானத் தாக்குதல்...
இதற்கிடையே, ஈராக்கில் முதல் முறையாக பிரெஞ்சு போர் விமானங்கள் தீவிரவாதிகளின் நிலைகள் மீது விமானத் தாக்குதலை நடத்தியுள்ளன. மேலும் சில தாக்குதல்களுக்கும் பிரெஞ்சுப் படையினர் திட்டமிட்டுள்ளனர். இதுவரை அமெரிக்க விமானப்படையினர் மட்டுமே விமானத் தாக்குதல்களை நடத்தி வந்த நிலையில் தற்போது பிரான்ஸும் அதில் இணைந்துள்ளது.
ஈராக்கின் வாதம்...
விமானத் தாக்குதல்கள் மூலம் தீவிரவாதிகளை பெருமளவில் சிதறடிக்க முடியும் என்று ஈராக் அரசும் கூறி வருகிறது. தரை மார்க்கமாக மோதுவதை விட வான்வெளித் தாக்குதல்கள்தான் தீவிரவாதிகளை வேகமாக பலவீனமடையச் செய்யும் என்பது ஈராக் அரசின் வாதமாகும்.
ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள்...
கிட்டத்தட்ட 20,000 முதல் 30,000 தீவிரவாதிகள் வரை ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இடம் பெற்றுள்ளனர். ஈராக், சிரியாவின் பல பகுதிகளை இவர்கள் பிடித்துள்ளனர். இதுவரை ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். பல முக்கிய இடங்களை இவர்கள் பிடித்துள்ளனர். அமெரிக்கர்கள் சிலரும், இங்கிலாந்து நாட்டுவரும் தலை துண்டித்துக் கொல்லப்பட்டுள்ளனர்.
ஈராக் திணறல்...
உலகின் மிகப் பெரிய பணக்கார தீவிரவாத அமைப்பாகவும் இது உருவெடுத்துள்ளது. பணமும், ஆயுதமும் இவர்களுக்குக் குவிந்து வருவதால் இவர்களை ஒடுக்க முடியாமல் ஈராக் அரசு திணறி வருகிறது.
முக்கியக் காரணம்...
அமெரிக்கர்கள் மற்றும் இங்கிலாந்து நாட்டவர் தலை துண்டித்துக் கொல்லப்பட்ட பிறகுதான் அமெரிக்கா இந்த அமைப்புக்கு எதிராக தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.